“சாரல் திருவிழா” வை வரவேற்கத் தயாராகும் குற்றாலம் - மலர்க்கண்காட்சிக்கும் ஏற்பாடு தீவிரம்
குற்றாலம்: குற்றாலத்தில் வரும் 27 ஆம் தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
குற்றாலத்தில் சீசனை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தும விதமாக ஐந்தருவி அருகே ரூபாய் 6 லட்சம் செலவில் சுற்று சூழல் பூங்கா உருவாக்கப்பட்டது.
இது 2011 ஆம் ஆண்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இங்கு நீரோடை பாலம், நீரூற்று, சிறுவர் விளையாட்டு திடல், தாமரை குளம் உள்ளிட்ட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன.
இதே போல் பல்வேறு வகையான மலர்கள் பூத்து குலுங்குகின்றன. நீரோடை பாலத்தி்ன் ஓரம் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து சலசலவென்று சத்தத்துடன் பாய்ந்து செல்லும் பழந்தோட்ட அருவியின் அழகை ரசிக்கலாம்.
பூங்காவின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பார்வையாளர் மாடத்தில் இருந்து குற்றாலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஊர்கள் மற்றும் வயல்கள், ஓங்கி வளர்ந்த மரங்களை கண்டு ரசிக்கலாம். சீசனை முன்னிட்டு குற்றாலத்தில் கடந்த ஆண்டு முதல் மலர் கண்காட்சி நடந்து வருகிறது.
இந்தாண்டு சாரல் திருவிழா வரும் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி சுற்று சூழல் பூங்கா வாளகத்தில் 27 ஆம் தேதி முதல் 29 ஆம் தேதி வரை 3 நாள் மலர் கண்காட்சி நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை தோட்டக்கலைத்துறை இயக்குனர் முகமது ராஜா, உதவி இயக்குனர் ஜெயமாலதி மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதற்காக மலர்கள் அனைத்தும் ஓசூர், பெங்களூரில் இருந்து கொண்டு வரப்படுகிறது. ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதை சுற்றுலா பயணிகளும் ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.