கொஞ்சி விளையாடும் அருவிகள்.. குற்றாலத்தில் குஷியாட்டம் போடும் மக்கள் கூட்டம்
குற்றாலம்: குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் பிரமாதமாக தண்ணீர் கொட்டி வருவதால் சீசன் களை கட்டி மக்கள் கூட்டம் அலை மோதுகிறது.
நாடெங்கிலும் இருந்து எராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் நேற்று முதல் குவிந்து வருகின்றனர். நேற்று ரம்ஜான் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்தது.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் குற்றால அருவியில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
லட்சுமி பாட்டியிடம் சங்கிலிப் பறிப்பு
இன்று அதிகாலை முதலே அருவிக்கரையில் கூட்டம் அலைமோதியது. இதில் மதுரையை சார்ந்த சுற்றுலாப் பயணி லக்ஷ்மி என்ற 70 வயது மூதாட்டியின் 10 பவுன் தங்க சங்கிலியை குளித்துக் கொண்டிருந்தப் போது யாரோ ஒருவர் அபகரித்து சென்றுவிட்டார்.
கேரள அருவிகளுக்கும் கூட்டம்
இங்குள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டினாலும், இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருகிலுள்ள கேரள மாநிலம் ஆரியங்காவு பாலருவி, அச்சன்கோவில் மணலாறு, செங்கோட்டை குண்டாறு உள்ளிட்ட பகுதிகளை நோக்கி சென்றவண்ணம் உள்ளனர்.
சரக்கு வாங்க ஒரு கூட்டம்
அதேபோல, அதிகாலை முதலே குற்றால அருவிகளில் குளியலை முடித்து பிற அருவிகளை நோக்கி படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள் "சரக்கு" வாங்குவதற்கு செங்கோட்டை, பிரானூர் பார்டர் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்திவிட்டு செல்வதால் அங்கு போக்குவரத்து பாதிப்பு அடிக்கடி ஏற்பட்டு வருகிறது.
குடிகார பயணிகளின் குத்தாட்டம்
குடித்துவிட்டு சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிகளில் போடும் ஆட்டம் அதிகரித்து வருகிறது. குண்டாறு நீர்த்தேக்கம் பகுதியில் இன்று சுற்றுலாப் பயணிகள் எராளமானவர்கள் திரண்டுள்ளதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
பயணிகளின உற்சாகப் படகுப் பயணம்
மேலும் அணைப் பகுதியில் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் உற்சாகமாக பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.
மாணவன் உயிரிழப்பு
இந்நிலையில் சிவகாசி கல்லூரியில் 3ஆம் ஆண்டு படிக்கும் கோவில்பட்டியை சார்ந்த 4 மாணவர்கள் குண்டாறு பகுதியில் குடித்து கும்மாளம் போட்டவாறு அணையின் ஆழமான பகுதியில் நீந்தி சென்றுள்ளனர். இதில் சதீஷ் என்ற மாணவன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். அவரது உடலைத் தேடும் பணியில் தீயணைப்பு துறையினரும், காவல்துறையினரும்,ஈடுப் பட்டுள்ளனர்.