குற்றாலத்தில் பழ வகைகள் விலை கடும் உயர்வு... தவிக்கும் வியாபாரிகள்!
சுற்றுலா பயணிகள் அதிகம் வரும் குற்றாலத்தில் பழ வகைகள் விலை அதிகரித்துள்ளது. இதனால் வியாபாரிகள் கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளனர்.
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் விளையும் பழங்கள் வரத்து குறைந்துள்ளதால் அவற்றின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
நெல்லை மாவட்டத்தில் குற்றாலம், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அரிய வகை மூலிகைகள் நிறைந்து காணப்படுகிறது. இந்த மலைப்பகுதிகளில் விளையும் அரிய வகை பழங்களுக்கும் கிராக்கி உண்டு.
சாதாரண வாழைப்பழம் முதல் குழந்தை பிறப்புக்கு உதவும் தூரியன் பழம் வரை இங்கு கிடைக்கும். அதில் குறிப்பாக மங்குஸ்தான், ரப்டான் பழங்கள் குற்றாலம், கொடைக்கானல் பகுதியில் மட்டுமே விளைகின்றன. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகள் இந்த பழங்களை விரும்பி வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இப்பகுதியில் போதிய மழை இல்லாத காரணத்தால் பழங்கள் விளைச்சல் குறைந்துள்ளது.
இதன் எதிரொலியாக ரப்டன் பழம் கிலோ ரூ.320க்கும், மங்குஸ்தான் பழம் ரூ.400 முதல் ரூ.500 வரையும் விற்கப்படுகிறது. அதிகபட்சமாக தூரியன் பழம் கிலோ ரூ.800க்கு விற்கப்படுகிறது.
இதுகுறித்து வியாபாரிகள் சிலர் கூறுகையில், குற்றாலம் மலைகளில் இந்தாண்டு அரிய வகை பழங்கள் விளைச்சல் குறைவாக உள்ளது. இதனால் குறிப்பிட்ட பழங்களை கேரள மாநிலம் திருச்சூரில் இருந்து வரவழைத்து விற்பனை செய்து வருகிறோம். ஆகையால் விலை அதிகரித்துள்ளது என தெரிவித்தனர்.