குளுகுளு குற்றாலம் சாரல் விழா... யோகா, கோலம் போட்டிகள்... மாணவர்கள், பெண்கள் உற்சாகம்!
தென்காசி : தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ள நிலையில், உற்சாகமாக நடைபெற்று வரும் சாரல் திருவிழாவில். மாணவ, மாணவிகளுக்கு யோகாப் போட்டிகளும், பெண்களுக்கான கோல போட்டியும் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் ஆர்வமுடன் கலந்து கொண்டு பரிசுகளை வென்றனர்.
Recommended Video
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் பிரதான அருவியான குற்றால மெயின் அருவி, ஐந்தருவி, புலியருவி, சிற்றருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அருவிகளில் தற்போது தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளது.
குற்றாலம் சாரல் திருவிழா கோலாகலம்..வண்ண லேசர் ஒளிகளால் ஜொலித்த அருவிகள்..பயணிகள் உற்சாகம்
முதல் சாரல் திருவிழா
குற்றால சீசன் காலகட்டங்களில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சாரல் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து தென்காசி தனி மாவட்டமாக பிரிக்கப்பட்ட நிலையில் நடைபெறும் முதல் சாரல் திருவிழா, கடந்த 5-ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. தினம் தோறும் விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், திரைப்பட கலைஞர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்று வருகின்றன.
மாணாக்கர்களுக்கு யோகா போட்டி
8 நாட்கள் நடைபெறும் சாரல் திருவிழாவின் 6-வது நாளில், மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா போட்டிகள் நடைபெற்றது. அதில் இந்திய மருத்தும் மற்றும் ஹோமியோபதி துறை சார்பில் பள்ளி குழந்தைகளுக்கான யோகா போட்டி நடைபெற்றது. இப் போட்டியில் மாணவி இந்து முதலிடம் பெற்றார். மாணவி தீபிகா இரண்டாம் இடம் விஜயலட்சுமி மூன்றாம் இடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
விழிப்புணர்வு நாடகம்
மேலும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டு சூரிய நமஸ்காரம், ஆரோக்கிய வாழ்விற்கு சித்த யோகாசனம், யோகாசன நடனம் மற்றும் சித்தா விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தென்காசி மற்றும் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர், ஆயுஷ் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள், மருத்துவமனை பணியாளர்கள், யோகா தெரபிஸ்ட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பெண்களுக்கு கோலப்போட்டி
மேலும் பெண்களுக்கான கோலப்போட்டி நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர். பிளாஸ்டிக் விழிப்புணர்வு, குற்றாலம் சாரல் திருவிழா சின்னம், மாசுபாடு, செஸ் ஒலிம்பிக் சின்னம் உள்ளிட்டவைகளை வண்ண கோலங்களாக இட்டனர். இதில் வெற்றி பெற்ற நான்கு நபர்களுக்கு பரிசுகளும், பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.
குற்றால சாரல் திருவிழாவையொட்டி, நாள்தோறும் பல்வேறு போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருவதால் குற்றால சீசன் களைகட்டியுள்ளது.