குற்றாலம்: சாரல் திருவிழா கலை நிகழ்ச்சிகளுடன் நாளை தொடக்கம்
குற்றாலம்: குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க 8 நாட்கள் சாரல் திருவிழா சனிக்கிழமையன்று தொடங்குகிறது. நீச்சல் போட்டி, கோலப்போட்டி, நாய்கண்காட்சி, ஆணழகன் போட்டி உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அருவிகள் நகரமான குற்றாலத்தில் சீசன் களை கட்டியுள்ளது. தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக சுற்றுலா துறை சார்பில் சாரல் திருவிழா வருகிற 25ம்தேதி தொடங்கி 1ம்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.
குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் 25ம்தேதி மாலை 4 மணிக்கு தொடக்கவிழா நடைபெறுகிறது. விழாவை சுற்றுலாத்துறை அமைச்சர் சண்முகநாதன் தொடங்கி வைக்கிறார். அரசு கூடுதல் தலைமை செயலாளர் சுற்றுலா பண்பாடு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை செயலாளர் கண்ணன் சிறப்புரையாற்றுகிறார். சுற்றுலாத்துறை ஆணையர் ஹர் சஹாய் மீனா விளக்கவுரையாற்றுகிறார்.
முத்துகருப்பன் எம்.பி., வீட்டு வசதி வாரிய தலைவர் முருகையாபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். மாவட்ட வருவாய் அதிகாரி குழந்தைவேல் வரவேற்று பேசுகிறார். முடிவில் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா நன்றி கூறுகிறார். இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
தோட்டக்கலை கண்காட்சி
2ம் நாளான 26ம்தேதி குற்றாலம் சுற்றுச்சூழல் பூங்காவில் தோட்டக்கலை கண்காட்சி-2015 காலை 10 மணிக்கு நடக்கிறது. அன்றைய தினம் சுற்றுலா பயணிகளுக்கு நீச்சல் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெறுபவர்களுக்கு மாலை குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நடைபெறும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டு அன்று இரவு 10 மணி வரை கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
நாய்கண்காட்சி
27ம்தேதி குற்றாலம் கலைவாணர் கலையரங்கில் நாய் கண்காட்சி, 28ம்தேதி கோலப்போட்டி மற்றும் கொழு கொழு குழந்தைகள் போட்டி நடக்கிறது.
ஓவியப்போட்டி
29ம் தேதி மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஓவியப்போட்டி, 30-ந்தேதி சுற்றுலா பயணிகளுக்கு படகு போட்டி, 31ம்தேதி ஆணழகன் போட்டி நடக்கிறது.
சரத்குமார் பங்கேற்பு
1ம்தேதி நிறைவு நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை தென்காசி சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் ஏற்பாடு செய்துள்ள திரைப்படம் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கு பெறும் சென்னை கலைசெல்வம், கடையம் ராஜூவின் பல்சுவை கொண்டாட்டம் நிகழ்ச்சி நடக்கிறது.
களைகட்டும் சீசன்
சாரல் திருவிழாவையொட்டி குற்றாலம் கலைவாணர் கலையரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. சாரல் திருவிழாவிற்கான ஏற்பாடுகளை குற்றாலம் பேரூராட்சி அலுவலர்கள் செய்து வருகின்றனர்.