குற்றாலத்தில் சாரல் மழை.. அருவிகளில் தண்ணீர்வரத்து அதிகரிப்பு.. மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
நெல்லை: குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகத்தோடு குளித்து சென்ற வண்ணம் உள்ளனர்.
குற்றாலத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரை சீசன் காலமாகும். தென்மேற்கு பருவமழை காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரிக்கும்.
இந்நிலையில் அருவிகளின் நகரமாக விளங்கும் குற்றாலம், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து வெகுவாக குறைந்து பாறையை தொட்டு தண்ணீர கொட்டிய நிலையில் காணப்பட்டது. தற்போது சாரல் மழை பெய்து வருவதால் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குளிக்க வரிசையில் நிற்காமல் சென்று குளித்து சென்ற வண்ணம் உள்ளனர். மேலும் வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருவதால் அருவிக்கு தண்ணீர்வரத்து கூடியுள்ளதால் விடுமுறை நாளான நாளையும், நாளை மறுநாளும் திரண்டுவரும் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து செல்ல வசதியாக தண்ணீர் கொட்டுகிறது.
வனப்பகுதியில் இந்த மழை நீடித்தால் மட்டுமே குற்றலத்தில் இன்னும் சீசன் களைகட்டும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும் தற்போது கொட்டும் நீரில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து சென்றவண்ணம் உள்ளனர்.