களையிழந்த குற்றால சீசன்... அதிக கட்டணத்தால் படகு குழாமும் வெறிச்!
தென்காசி: குற்றாலத்தில் கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக அடித்து வருவதால், அங்குள்ள அருவிகளில் நீர்வரத்துக் குறைந்துள்ளது. இதனால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் காலமான ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 3மாதங்கள் குற்றாலத்தில் சீசன் காலமாகும். கடந்த சிலவாரங்களுக்கு முன் தீவிரமாக பெய்த தென்மேற்குமழையின் காரணமாக இங்குள்ள அருவிகளுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியது.
அதன் பின் இந்த பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் குற்றாலத்தில் கடந்த சில தினங்களாக வெயில் கொளுத்தி வருகிறது. குற்றாலம் மெயின் அருவி,ஐந்தருவி,பழைய குற்றாலம் அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.
அதுமட்டுமின்றி, குற்றாலம் வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய பொழுது போக்கு இடமாக விளங்குவது படகு குழாம். ஆனால் இந்த ஆண்டு படகு குழாமில் அரை மணி நேரத்திற்கு இருநபர் மிதி படகுக்கு -115 ரூபாயும், 4நபர் மிதி படகுக்கு 145 ரூபாயும், 4பேர் துடுப்பு படகுக்கு 180ரூபாயும், தனி நபர் படகுக்கு 90 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதனால் படகுச் சவாரி செய்ய சுற்றுலாப் பயணிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. இதன் எதிரொலியாக் படகு குழாம் வெறிச்சோடி காணப்படுகிறது.