மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அறிகுறி... விரைவில் குற்றால சீசன் தொடங்கும்!
நெல்லை: மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை அறிகுறி தென்படுவதால் குற்றாலத்தில் சீசன் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நெல்லை மாவட்டத்தில் இந்தாண்டு கோடை வெயில் 105 டிகிரியை தாண்டி வருத்தெடுக்கிறது. இதனால் பாபநாசம், மணிமுத்தாறு உள்ளிட்ட முக்கிய அணைகளின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. இவ்வாண்டு கோடை மழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை.
இந்நிலையில், வரும் 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது. இதனால் தற்போதே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த காற்று வீசத் தொடங்கியுள்ளது. கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை முன் கூட்டியே தொடங்கும் அறிகுறி தெரிகிறது.
இதன் எதிரோலியாக குற்றாலத்தில சீசன் குறித்த காலத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் தென்றல் காற்று வீச தொடங்கியுள்ளதால் அடவி நயினார் அணைக்கட்டுக்கு தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. இது போல் நெல்லை மாவட்டம் பாபநாசம் மலைப்பகுதியில் தற்போது மழை பெய்து வருகிறது.
அங்கும் தண்ணீர் வரத்து தொடங்கியுள்ளது. குண்டாறு அணைப்பகுதியிலும் மழை பெய்தது. குண்டாறு அணையின் நீர்மட்டம் தற்போது 13.08 அடியாக உள்ளது. இதனால் சீசன் காலத்தில் தராளமாக தண்ணீர் வரத்து இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.