குற்றாலத்தில் இதமான சீசன்... குளு குளு சாரல்.... உற்சாகமாய் அனுபவிக்கும் பயணிகள்
நெல்லை: குற்றாலம் மெயின் அருவியில் நேற்று வெள்ளப்பெருக்கினால் குளிக்க தடை விதிக்கப்பட்ட நிலையில் இன்று தண்ணீர் குறைந்துள்ளதால் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இருந்து ஏராளமான பயணிகள் அருவிகளில் நீராட குவிந்து வருகின்றனர். குளுகுளு சாரலுடன் இதமான சீசன் நிலவுவதால் பயணிகள் உற்சாகமடைந்துள்ளனர்.
குற்றாலத்தில் ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை சீசன் காலமாகும். இந்த ஆண்டு ஜூன் முதல்வாரத்திலேயே சீசன் துவங்கியது. கடந்த ஒரு மாதத்தில்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட அளவு மட்டுமே சாரல் பெய்துள்ளது. மீதி நாட்களில் மந்தமான நிலையிலேயே காணப்பட்டது.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சாரல் நன்றாக பெய்து வருகிறது. மலைப்பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
மெயின் அருவியில் வெள்ளம்
பிரதான அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி தண்ணீர் விழுந்ததால் போலீசார் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்தனர். இதை தொடர்ந்து ஐந்தருவியிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. அங்கு பெண்கள் பகுதியில் மட்டும் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
அருவிகளில் தண்ணீர்
பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் நன்றாக விழுகிறது. இந்த சீசனில் தண்ணீர் கொஞ்சம் கூடுதலாக விழுந்தாலும் பாதுகாப்பு கருதி குளிக்க தடை விதிப்பது வெகு தொலைவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றமடைந்தனர்.
சுற்றுலா பயணிகள்
இந்தாண்டு சாரல் சரிவர இல்லாத நிலையில் சாரல் பெய்யும் ஒரு சில நாட்களில் குளிக்க தடை விதிப்பது சரியல்ல என சுற்றுலா பயணிகள் குற்றம் சாட்டினர். குளிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீசாரிடம் வேண்டுகோள் விடுத்தனர்.
உயிருக்கு ஆபத்து
கடந்த மாதம் ஆமை மற்றும் மரக்கட்டைகள் விழுந்து இருவருக்கு காயம் ஏற்பட்டதால்தான் முன்னேச்சரிக்கையாக தடை விதிக்கப்படுவதாக போலீசார் தெரிவிக்கின்றனர். இருப்பினும் தகுந்த பாதுகாப்புடன் குளிக்க செல்ல அறிவுறுத்துகிறோம் என்றும் போலீசார் சுற்றுலா பயணிகளிடம் விளக்கினர்.
குளிக்க அனுமதி
இன்று காலைமுதல் வெள்ளப்பெருக்கு குறைந்திருப்பதால், மெயின் அருவியில் குளிப்பதற்கான தடை நீக்கப்பட்டது. இதற்காகவே காத்திருந்த பயணிகள் உற்சாகத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.
பயணிகள் உற்சாகம்
இன்றும் நாளையும் விடுமுறை நாள் என்பதால் அருவிகளில் நீராட ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.
இதமான சாரலுடன் குற்றால சீசன் களைகட்டியுள்ளதால் சிறு வியாபாரிகளும், கடைக்காரர்களும் உற்சாகமடைந்துள்ளனர்.