மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை.. குற்றாலத்தில் வெள்ளம்... அணைகளில் நீர் மட்டம் உயருகிறது
நெல்லை: நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில்கடந்த மாதம் துவங்கி வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கன மழை பெய்து வருகிறது.
இதனால் நெல்லை மாவட்டத்தில் கடனா நதி, ராமநதி, கருப்பாநதி, நம்பியாறு உள்ளிட்ட பல அணைகளில் நீர் நிரம்பி வருகிறது. முக்கிய அணைகளான பாபநாசம், சேர்வலாறு அணைகள் நிரம்பி வருகின்றன.
மணிமுத்தாறு அணை கொஞ்சம் கொஞ்சமாக நிரம்பி வருகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லை. ஆனால் நேற்று மாலையில் திடீரென மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திடீர் மழை பெய்ததால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 135.35 அடியாக உள்ளது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 15026 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 304 கன அடிநீர் வருகிறது.
இதுபோல் ராமநதி அணையின் நீர்மட்டம் 83.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 140 கன அடி தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது. கடனா நதி அணையின் நீர்மட்டம் 82.50 அடியாக உள்ளது. அணைக்கு வரும் உபரி நீர் 35 கன அடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இந்த அணைகளின் நீர் உயர்வால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
குற்றாலத்தில் வெள்ளம்
இந்த நிலையில் மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதியான தென்காசி, செங்கோட்டை, குற்றாலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை வானம் இருண்டு லேசான சாரல் மழை பெய்தது. பின்னர் நேரம் கூடக் கூட மழையின் வேகம் அதிகரித்து கன மழை பெய்யத் தொடங்கியது.
இதன் காரணமாக குற்றால்ம் மெயின் அருவியில் பாதுகாப்பு வளையத்தை ஒட்டி தண்ணீர் கொட்டியதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எச்சரிக்கை ஒலிப்பான் மூலம் அருவியில் குளித்துக் கொண்டிருந்த அய்யப்ப பக்தர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை அப்புறப்படுத்தினர். அதன் பின் தண்ணீரின் வேகம் கொஞ்சம் குறைந்ததால் குளிக்க அனுமதி வழங்க முடிவு செய்த நேரம் வனப் பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக அருவியில் தண்ணீர் வரத்து மீண்டும் அதிகரித்தது.
இதைத் தொடர்ந்து போலீசார் அருவிப்பகுதிக்கு செல்லும் பாதையில் தடுப்புகளை வைத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதித்தனர். குற்றால அருவியில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் 9வது முறையாக குளிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சரியான நேரத்தில் போலீசார் சுற்றுலாப் பயணிகள், அய்யப்ப பக்தர்கள் குளிக்க தடை விதித்ததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.