கோவையும் 'தூங்காநகரம்' ஆனது... இரவு நேர கடைகளுக்கு போலீஸ் அனுமதி- வியாபாரிகள், மக்கள் ஹேப்பிங்கண்ணா
கோவை: கோவையில் ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் கடைகள் இயங்க போலீசார் புத்தாண்டு முதல் அனுமதி அளித்துள்ளனர். இதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது.
மதுரை தமிழகத்தின் தூங்கா நகரம் என அழைக்கப்படுகிறது. எனவே, அங்கு மக்களின் வசதிக்காக பல முக்கிய இடங்களில் பேக்கர், ஓட்டல்கள், தள்ளுவண்டி கடைகள் உள்ளிட்டவைகளுக்கு 24 மணி நேரம் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1998ம் ஆண்டு கோவையில் நடைபெற்ற குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு காரணங்களுக்காக இரவு 10 மணிக்கு மேல் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.
11 மணி வரை...
பின்னர் மக்களின் தொடர் கோரிக்கைகளைத் தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் கடைகளை இரவு 11 மணி வரை திறந்து வைத்திருக்க போலீசார் அனுமதி அளித்தனர்.
அனுமதி...
இந்நிலையில், இந்தத் தடையும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. புத்தாண்டு முதல் பொதுமக்களின் வசதிக்காக கோவை ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைத்திருக்கலாம் என போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.
வரவேற்பு...
அதனைத் தொடர்ந்து கோவை மாநகரில் இரவு நேரங்களில் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக் கூடிய காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர், சாய்பாபா காலனி ஆகிய பேருந்து நிலையங்களிலும், ரயில் நிலையம், வடகோவை ரயில் நிலையம், போத்தனூர் ரயில் நிலையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இது பயணிகள் மற்றும் வியாபாரிகள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
சிசிடிவி வசதி...
கடைகளைத் திறந்து வைத்திருக்க அனுமதி அளித்துள்ள போலீசார், அவ்வாறு இரவு முழுவதும் திறந்திருக்கும் கடைகளில் கண்காணிப்பு கேமரா வசதி ஏற்படுத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.
இனி கோவையும், தூங்காநகரம் என்று அழைக்கப்படுவதாக!