மாடு விற்பனை விவகாரம்: மதச்சாயம் தேவை இல்லை- மாட்டிறைச்சியும் கூடாது- டாக்டர் கிருஷ்ணசாமி-Exclusive
மத்திய அரசு கொண்டு வரும் எந்த சட்டத்தையும் மதச்சாயம் பூசிய கண்களோடு பார்க்க வேண்டாம் என ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் டாக்டர் கிருசனசாமி கூறியுள்ளார்.
சென்னை: மத்திய அரசு விதித்துள்ள மாடு விற்பனை மற்றும் வாங்குவதற்கு தடை சட்டத்தை மதச் சாய கண்ணோடு பார்க்கக் கூடாது என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இறைச்சிக்காக பசு மாட்டை விற்கவோ அல்லது வாங்கவோ கூடாது என்று மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதிலிருந்து நாடு முழுவதும் இந்த தடைக்கு எதிரான விவாதங்களும் எதிர்ப்புக் குரல்களும் எழுந்துவரும் வேளையில் இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒன் இந்தியாவுக்கு சிறப்புப் பேட்டி அளித்துள்ளார்.
அவர் கூறியதாவது: ''இந்தியாவில் உள்ள வேளாண்மை குடிமக்கள் பசுக்களை தங்கள் உற்ற தோழராக போற்றி, மதித்து வருகிறார்கள். ஏறக்குறைய 5,000 ஆண்டுகளுக்கு முன் பசுக்களை, காளைகளை கொன்றிருக்கும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அப்போது புத்தரே பசுவதைகளுக்கு எதிராக குரல் கொடுத்திருக்கிறார். ஆகையால் தொன்றுதொட்டு பசுக்களை பாதுகாப்பதும் அதை அழிப்பதுமான போராட்டம் நடைபெற்று வந்திருக்கிறது. புத்தரின் யுத்தமே பசுவதைக்கு எதிராகத்தான் தொடங்கியிருக்கிறது.
தற்போது பசுக்களை காக்க வேண்டும் என்கிற குரல், பசுக்களை இறைச்சிக்காக பயன்படுத்தலாம் என்கிற குரல் தொடர்ந்து இந்தியாவில் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்டு வாழும் மக்கள் 85 சதவீதம் பேர் பசு மாமிசத்தை உண்பவர்கள் இல்லை. தமிழகத்தில் கூட 80 சதவீதம் மக்கள் பசுமாமிசத்தை உண்பது இல்லை.
தேவந்திர குல வேளாளர் மாட்டுக்கறி சாப்பிடுவது இல்லை
பட்டியல் இனத்தவரில் கூட,தேவேந்திர குல வேளாளர் இனமக்கள் பசுவை மாமிசத்தை உணவாக உட்கொண்டதாக வரலாறு இல்லை. புதிய தமிழகம் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து நாட்டுபசுக்கள், காளைகள் அழிந்துவிடக் கூடாது என்று குரல் கொடுத்து வருகிறோம். காரணம் இந்த மொழியின் அடையாளமும் மண்ணின் அடையாளமும் பசுக்களுடன் சேர்ந்து வந்திருக்கிறது.
பல்லுயிர் ஓம்புதல்
என்னைப் பொறுத்தவரையில், திருவள்ளுவரின் தத்துவத்துக்கேற்ப பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல், என அனைத்து உயிரினங்களையும் சமமாக பாவிக்கின்றன மனம் வேண்டும். ஆனால் அதை கொல்லும் மனமும் இருக்கிறது.
இறைச்சி கூடங்கள் மூடல் இல்லை
மத்திய அரசு மாட்டிறைச்சி கூடங்களை மூட வேண்டும் என உத்தரவு போடவில்லை. இறைச்சிக்காக மாடுகளை சந்தையில் கொண்டு வந்து விற்காதீர்கள் என மத்திய அரசு கூறியுள்ளதே தவிர இறைச்சிக் கூடங்களை மூட வேண்டும் என்று கூறவில்லை. அதனால் பல லாபங்கள் விவசாயிகளுக்கு உண்டு. விவசாயிகள் மாடுகளை சந்தைக்கு வந்து விற்றால், அதனை அடிமாட்டு விலக்குத்தான் வாங்குவார்கள். ஆனால் வீட்டில் வைத்து இருந்தால், அவர்களைத் தேடி வியாபாரிகளே வருவார்கள். இதனால் விவசாயிகள் கூடுதல் விலை வைத்து விற்கலாம்.
ஏற்றுமதிக்கு தடை தேவை
விலங்குகளை கொடுமைப்படுத்தாமல் இருக்கும்படியான மாற்றங்களை சட்டத்தில் கொண்டு வரலாம். வெளிநாடுகளுக்கு மாட்டிறைச்சி கோடிக்கணக்கில் விற்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். தடை, முதலில் அங்கிருந்துதான் தொடங்க வேண்டும். பிறகு உள்நாட்டில் பசு வதைக்கு தடை விதிக்கலாம்.
தடை திணிப்பு கூடாது
நாட்டு இனங்கள் அழிக்கப்படுகிறது என மத்திய அரசு கருதினால்,முதலில் மாட்டிறைச்சி ஏற்றுமதியை அரசு நிறுத்த வேண்டும். ஆனால் இந்திய மக்கள் புரத சத்துக்காகவும் கொழுப்புச் சத்துக்காகவும் மாட்டிறைச்சியைப் பயன்படுத்தினால் அதற்கு தடை விதித்தால் பாதிப்பு உண்டாகும். நல்ல தெளிவு வரும் வரை மத்திய அரசு இந்த சட்டத்தைத் திணிக்காமல் இருக்கலாம். அவசரப்பட்டு அமலாக்காமல் இருக்கலாம் என்பது எனது வேண்டுகோள்.
மதச்சாயம் பூசாதீங்க!
மத்திய அரசு எந்த சட்டத்தைக் கொண்டு வந்தாலும் உடனே அதை மோடிக்கு எதிராக தமிழர்கள் திருப்புகிறார்கள். அதன் மீது மதச்சாயம் பூசுகிறார்கள். அதேபோல் சட்டம் கொண்டு வந்ததை மதச் சாயத்தோடு பார்ப்பது, மத சாயம் பூசிக்கொண்டு இந்த சட்டத்தை எதிர்ப்பது நல்லதல்ல. இதில் உள்ள நல்ல அம்சங்களை எடுத்துக்கொள்ள வேண்டும்.
மாட்டிறைச்சி உடம்புக்கு நல்லதல்ல
ஒரு மருத்துவராக சொல்வது, மாட்டிறைச்சி உடம்புக்கு நல்லதல்ல. அதில் கொழுப்பு சத்து 25- 40 சதவிகிதம் இருக்கிறது.அதனால் இதயநோய் உண்டாவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே உடலுக்கு நல்லது என்ற அடிப்படையில் மாட்டிறைச்சி சாப்பிடுவதிலிருந்து மெல்ல மெல்ல விலகுவது நல்லது.
இவ்வாறு டாக்டர். கிருஷ்ணமூர்த்தி கூறினார்.