பழனியில் வெடித்த பசுமாடு பிரச்சினை.. இரு பிரிவினர் மோதலில் அரசு பஸ் மீது கல்வீச்சு.. போலீஸ் தடியடி
பழனியில் மாடுகளை ஏற்றிச் சென்ற லாரியை வழிமறித்து போராட்டம் நடத்தியதால் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது, இதனை போலீசா;u தடியடி நடத்திக் கலைத்தனர்.
பழனி : பசுங்கன்றுகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை மறித்து இந்து அமைப்பினர் நடத்திய போராட்டம் இரு பிரிவினரிடையேயான மோதலாக மாறி கல்வீச்சு நடந்ததால் போலீசார் தடியடியில் ஈடுபட்டனர்.
விவசாயி ஒருவர் 7 பசு மாடுகளை வாங்கிக் கொண்டு பழனி வழியாக பொள்ளாச்சி சென்றுள்ளார். அப்போது இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் மாடுகள் இறைச்சி விற்பனைக்காக கொண்டு செல்லப்படுவதாக குற்றம்சாட்டி அந்த லாரியை மடக்கி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
விவரம் கேள்விப்பட்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்,எஸ்டிபிஐ, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் கூடினர். விவசாயத்திற்காக கொண்டு செல்லும் பசுக்கன்றுகளை வழிமறுப்பது தவறு என்றும் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இரு தரப்பிடையேயான வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு பிரிவினரும் கல்வீசித் தாக்குதலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கல்வீச்சில் ஈடுபட்டவர்களை தடி நடத்தினர். காவி உடையணிந்திருந்த இளைஞர் உள்ளிட்ட இருவரை அடித்து வெளுத்துவிட்டனர் போலீசார்.
இரு பிரிவினரின் கல்வீச்சால் அந்தப் பகுதியில் நின்றிருந்த அரசுப் பேருந்தின் கண்ணாடி உடைந்தது. பதற்றம் காரணமாக அந்தப் பகுதியில் கடைகள் மூடப்பட்டன, 2 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இந்த வாக்குவாதம் கல்வீச்சில் முடிந்தது.
இரு தரப்பினரிடையே மோதல் அதிகரித்தால் போலீசார் குவிக்கப்பட்டு தடியடி நடத்தப்பட்டது. பதற்றம் அதிகரிக்காமல் இருக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.