வாங்க வாசன், இந்த பக்கம் வந்துவிடுங்கள்: விடாமல் மீண்டும் அழைக்கும் சிபிஐ
புதுக்கோட்டை: தேமுதிக- மக்கள் நலக் கூட்டணிக்கு வருமாறு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசனுக்கு மீண்டும் அழைப்பு விடுப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் சி. மகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் புதுக்கோட்டையில் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
அதிமுக வேட்பாளர் பட்டியலில் கூட்டணி கட்சிகளுக்கு வெறும் 7 இடங்கள் தான் அளிக்கப்பட்டுள்ளது. கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் இரட்டை இல்லை சின்னத்தில் போட்டியிட வைக்கப்பட்டுள்ளது அப்பட்டமான ஜனநாயகப் படுகொலை ஆகும்.
அதிமுக, திமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி உள்ளது. இந்த கூட்டணிக்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகிக் கொண்டிருக்கிறது. இந்த கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸும் வர வேண்டும் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறோம்.
திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த கடன் அதிமுக ஆட்சியில் ரூ.2.40 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. இது அடிப்படை பொருளாதாரத்தையே தகர்க்கும் அளவுக்கு உள்ளது.
சிறிதாவூர் பங்களாவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்பது தான் எங்கள் கட்சியின் நிலைப்பாடு. அதிமுகவும் சரி, திமுகவும் சரி பணத்தை நம்பியே தேர்தலை சந்திக்கின்றன. கப்பல்கள் மற்றும் கண்டெய்னர்களில் கருப்புப் பணத்தை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து நான் போட்டியிட்டபோது அங்கு வாக்காளர்களுக்கு பணம், இலவசங்கள் எப்படி வழங்கப்பட்டது என்பதை பார்த்தேன். அங்கு பிற்பகல் 2 மணிக்கு மேல் நடந்த வாக்குப்பதிவு குறித்த வீடியோவை தேர்தல் ஆணையம் பரிசீலனை செய்தும் நடவடிக்கை எடுக்காதது ஏன் என தெரியவில்லை.
தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதை முறியடித்து தேமுதிக-மக்கள் நலக் கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
கூட்டணி குறித்து வாசன் இன்னும் ஒரு முடிவுக்கு வராமல் உள்ள நிலையில் அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.