மதுவுக்கு எதிராக 94 வயதில் போராட்டம்: வைகோவின் தாயாரை நேரில் பாராட்டிய நல்லக்கண்ணு
நெல்லை: நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லக்கண்ணு சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
குமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் நடந்த மது ஒழிப்பு போராட்டத்தில் காந்தியவாதி சசிபெருமாள் களப்பலியானார். இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மதுவுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் சொந்த ஊரான நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி வைகோவின் தாயார் மாரியம்மாள், வைகோவின் சகோதரரும் பஞ்சாயத்து தலைவருமான ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் ஊர்வலமாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஞாயிறன்று டாஸ்மாக் கடை அருகே யாரும் செல்லாதவாறு போலீசார் பாதுகாப்பு அரண் அமைத்து நின்றனர். இந்நிலையில், மதியம் 3 மணிக்கு கலிங்கப்பட்டி வந்த வைகோ, பிரசார வாகனத்தில் நின்றபடி பொதுமக்கள் மத்தியில் பேசினார். அப்போது பக்கத்து கிராமமான கணபதிபட்டியைச் சேர்ந்த ராமலிங்கம் (40) என்பவர் ராமராஜபுரம் செல்லும் சாலையில் உள்ள செல்போன் டவரில் திடீரென ஏற தொடங்கினார். அவரை தடுப்பதற்காக போலீசார் அங்கு ஓடியதால், திரண்டிருந்த கும்பல் மதுக்கடைக்குள் நுழைந்தது. மதுபான பெட்டிகளை ரோட்டில் எடுத்து போட்டு உடைத்து நொறுக்கினர். பின்னர் தீ வைத்து கொளுத்தினர். கூட்டத்தை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். கூட்டத்திற்குள் புகுந்து தடியடி நடத்தினர். தடியடியில் வைகோ உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர்.
வைகோ - திருமாவளவன்
போலீசார் தடியடி நடத்தி கொண்டிருக்கும்போதே வேனில் இருந்து இறங்கிய வைகோ என்னை முதலில் சுடுங்கள் எனக்கூறி சாலையில் நடந்து சென்றார். அவரை தடுத்து நிறுத்தி அழைத்து வந்தனர். தொடர்ந்து வைகோ தலைமையில் பொதுமக்கள் கலிங்கப்பட்டி - சங்கரன்கோவில் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். இதையறிந்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கலிங்கப்பட்டி வந்து வைகோவுடன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
வழக்குப் பதிவு
இந்த நிலையில் வைகோ உள்ளிட்ட 52 பேர் மீது சங்கரன்கோவில் தாசில்தார் சிவகுமார் அளித்த புகாரின் பேரில் கரிவலம்வந்தநல்லூர் இன்ஸ்பெக்டர் அழகு கண்ணன் வழக்குப்பதிவு செய்தார். நான்காவது நாளாக இன்றும் பதற்றம் நீடிப்பதால் கலிங்கப்பட்டியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
நல்லக்கண்ணு வருகை
இந்த நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு, கலிங்கப்பட்டிக்கு வருகை தந்தார். வைகோ இல்லத்திற்கு சென்ற அவர், வைகோவின் தாயார் மாரியம்மாளை பாராட்டி சால்வை அறிவித்தார். கலிங்கப்பட்டி மதுக்கடை போராட்டத்தில் காயம்பட்டுள்ள வைகோ தம்பி வை.ரவிச்சந்திரனிடம் நலம் விசாரித்தார். பின்னர் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
டாஸ்மாக்கடைகளை மூடுங்கள்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அரசு கொண்டு வரவேண்டும். வைகோ மீது போடப்பட்ட வழக்கை அரசு திரும்ப பெற வேண்டும் என்று செய்தியாளர்களிடம் பேசிய நல்லக்கண்ணு வலியுறுத்தினார். அறவழியில் போராட்டம் தொடரும் என்ற கூறிய அவர், இது அரசியல் நோக்கத்தோடு நடைபெறும் போராட்டம் அல்ல என்று கூறினார்.
ஆளும் கட்சி நசுக்கப்பார்க்கிறது
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, இந்த முழு அடைப்புக்கு திமுக ஆதரவளிக்கவில்லை, பாமக ஆதரவு அளிக்கவில்லை, வணிகர் சங்கங்களில் விக்ரமராஜா ஆதரவு அளிக்கவில்லை. ஆனாலும் இந்த போராட்டம் முழு வெற்றி பெற்றுள்ளது. இது ஆரம்பம்தான். ஆளும் கட்சி இந்த போராட்டத்தை நசுக்கப் பார்க்கிறது. இரவோடு இரவாக ஏராளமானோரை கைது செய்தது. ஆனாலும் முழு அடைப்பு வெற்றி பெற்றுள்ளது என்றார்.