போயஸ் கார்டனில் ஜெயலலிதா படத்திற்கு நல்லக்கண்ணு அஞ்சலி- சசிகலாவுக்கு ஆறுதல்
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்து மறைந்த போயஸ் தோட்டத்து வீட்டிற்கு வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு அஞ்சலி செலுத்தினார்.
சென்னை : ஜெயலலிதா கடந்த செப்டம்பர் 22ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த டிசம்பர் 5ம் தேதி மரணமடைந்தார். அவரது உடலுக்கு நாடு முழுவதிலும் இருந்தும் முக்கிய தலைவர்களும், அரசியல் கட்சி பிரபலங்களும் அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி ஆகியோரும் வந்து ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவின் மனைவி ரஞ்சிதம் கடந்த டிசம்பர் 1ம் தேதி மரணமடைந்தார். அவரது மறைவினால் ஜெயலலிதா உடலுக்கு நல்லக்கண்ணு அவர்களால் அஞ்சலி செலுத்த முடியாமல் போனது.
இதனையடுத்து இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனுடன் போயஸ் கார்டன் வந்த நல்லக்கண்ணு, ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் சசிகலாவிற்கும் ஆறுதல் கூறினார்.