ஆலை மூடல் அதிகரிக்கிறது: அரசு மவுனம் சாதிக்கிறது- மார்க்சிஸ்ட் குற்றச்சாட்டு
சென்னை: தமிழகத்தில் அனைத்து துறைகளிலும் லஞ்சம், ஊழல் பெருகிவிட்டது என்று புகார் கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ. சவுந்தரராஜன், ஆலை மூடல்கள் அதிகரிக்கிறது இந்த விசயத்தில் அரசு மவுனம் சாதிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டத்தில் ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தினார். ஆளுநர் புறக்கணித்து திமுக, புதிய தமிழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
குற்றச்சாட்டு
ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளும்கட்சியினரின் அராஜகம் தலைவிரித்தாடியது. அதிகார துஷ்பிரயோகம் செய்தனர். பணபலத்தாலும், படைபலத்தாலும் வெற்றி பெற்றுள்ளனர். இதை தட்டிக்கேட்க வேண்டிய தேர்தல் ஆணையமும், ஆளுநரும் இதனை கண்டு கொள்ளவில்லை.
தினம் தினம் கொலைகளும், கொள்ளைகளும் அரங்கேறி வருகின்றன. ஆனால் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதாக பாராட்டுப் பத்திரம்
வாசிப்பது சரியா?
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சலுக்கு ஏராளமானோர் செத்து மடிகின்றனர். நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் இல்லை.
தமிழகத்தில் ஆலைமூடல் அதிகரிக்கிறது, ஆனால் அதை அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. இதனால் 30000 பேர் வேலையின்றி தவிப்பதாகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ குற்றம் சாட்டினார்.