செல்லாத ரூபாய் நோட்டு: இந்தியன் வங்கி முன் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது
மோடி அறிவித்த செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பை கண்டித்து சென்னையில் இந்தியன் வங்கி முன் போராடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை: 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று கடந்த நவம்பர் 8ம் தேதி அறிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி. வங்கிகளை தவிர்த்து அனைத்து இடங்களிலும் ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று இறுதிநாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை கே.கே.நகரில் உள்ள இந்தியன் வங்கி முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 500, 1000 ரூபாய் நோட்டு செல்லாதது என்று பிரதமர் மோடி அறிவித்ததை திரும்பப் பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினரின் போராட்டத்தால் வங்கியில், பண பரிவர்த்தணை செய்ய வந்த மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.