இரட்டை இலை சின்னம் ஒதுக்குவதற்காக தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா? முத்தரசன் சுளீர்
இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகதான் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகதான் ஆர்கே நகர் தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு தாமதிக்கப்பட்டதா என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்கே நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தினகரன் அணி சார்பில் தினகரன், அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆர்கே நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது தேர்தல் ஆணையத்தின் மீது அவநம்பிக்கை வரும் வகையில் அதன் செயல்பாடு உள்ளது என அவர் குற்றம்சாட்டினர். இரட்டை இலைச்சின்னம் யாருக்கு என அறிவிக்கப்பட்டதற்கு மறுநாள் ஆர்கே நகர் இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் இரட்டை இலைச்சின்னத்தை ஒதுக்குவதற்காகத்தான் தேர்தல் அறிவிப்பு தாமதமாக்கப்பட்டதா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஆளுநர் மூலம் மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு இடையூறு ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
கவுரி லங்கேஷ் உட்பட பத்திரிக்கையளர்களின் கொலை குறித்து மத்திய அரசு வாய்திறக்கவில்லை என்றும் முத்தரசன் குற்றம்சாட்டினார்.