அக்டோபர் 5; விலைவாசி உயர்வு எதிர்ப்பு தினம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவு
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய செயலாளர் டி.ராஜா, அக்டோபர் 5 ஆம் தேதியை விலைவாசி உயர்வு எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்து உள்ளோம் எனக் கூறியுள்ளார்.
டெல்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் 2 நாள் தேசிய அளவிலான மாநாடு நடந்தது. மாநாட்டின்போது செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, "நரேந்திரமோடியின் அரசு விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து உள்ளது. நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்த வண்ணம் உள்ளது.
சர்வதேச அளவில் பெட்ரோலிய பொருட்களின் விலை குறைந்திருந்தாலும் இந்தியாவில் மட்டும் அதன் விலை குறையவில்லை. இதனால் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்து வருகிறது.
விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய நரேந்திரமோடியின் அரசை கண்டிக்கும் வகையில், அக்டோபர் 5ந் தேதியை விலைவாசி உயர்வு எதிர்ப்பு தினமாக கடைபிடிக்க முடிவு செய்து உள்ளோம்" என தெரிவித்தார்.