டெங்கு மரணங்களை மறைத்து அரசு பொய் தகவல்களை பரப்புகிறது. - முத்தரசன் - வீடியோ
நோயாளிக்கு டெங்குக் காய்ச்சல் என பதிவு செய்யக் கூடாது என அரசு வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளது என சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
திருச்சி: தனியார் மருத்துவமனைகளில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களை வேறு காய்ச்சல் என்று பதிய வேண்டும் என தமிழக அரசு வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பரவி, தினமும் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை மடிகின்றனர். ஆனால் அரசு டெங்குக் காய்ச்சல் கட்டுக்குள் தான் இருக்கிறது என கூறுகிறது.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், தனியார் மருத்துவமனைகளில் டெங்குவால் பாதிக்கப்பட்டு வரும் விவரங்களை பதியும் போது, டெங்கு காய்ச்சலுக்கு பதில் வேறு காய்ச்சல் என தான் பதிய வேண்டும் என அரசு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனால் டெங்கு குறித்த உண்மை புள்ளிவிவரங்களை அரசு மறைக்கிறது.
மேலும் அரசு மருத்துவமனைகளில் ஒரு கட்டத்துக்கு மேல் டெங்கு என பதிவு செய்வதில்லை என பகிரங்கமாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார். ஆனால் கடந்த ஒரு வார காலத்துக்கும் மேலாக தினம் சராசரியாக 11-12 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழக்கின்றனர்.