வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் கடுமையாக உழைப்பார்கள்: முத்தரசன்
வகுப்புவாத சக்திகளை இந்தியா முழுவதும் முறியடிக்க இடதுசாரிகள் உழைப்பார்கள் என்று முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவை : வகுப்புவாத சக்திகளை இந்தியா முழுவதும் முறியடிக்க கம்யூனிஸ்ட்டுகள் எந்தவித சமரசமுமின்றி பாடுபடுவார்கள் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்திய கம்யூனிஸ் கட்சியின் மாவட்ட மாநாடு நடந்தது. இதில் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். மாநிலச் செயலாளர் முத்தரசன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
அதன் பிறகு முத்தரசன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, இந்தியா முழுவதும் வகுப்புவாத சக்திகளை முறியடிக்க இடதுசாரிகள் சரியாகவும், எந்த வித சமரசமின்றியும் போராடுவார்கள் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், வகுப்புவாத சக்திகளைத் தோற்கடிக்க மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளை, ஒருங்கிணைத்து ஒற்றுமைப்படுத்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து உழைக்கும் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசுகையில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி வரி உள்ளிட்ட தவறான பொருளாதார நடவடிக்கைகளால் மத்திய பாஜக அரசு இந்திய பொருளாதாரத்தை சிதைத்துள்ளது.
இந்த நடவடிக்கைகளால் தொழில்நகரங்களான திருப்பூர், கோவை ஆகியவை கடும் பாதிப்படைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் சிறு குறு தொழில்கள் பாதிக்கப்பட்டு, லட்சக்கணக்கானோர் வேலையிழந்துள்ளனர் என்றும் முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.