டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி மின்சாரம், தொலைபேசி கட்டணங்களை ரத்து செய்க.. ஜி. ராமகிருஷ்ணன்
சென்னை: வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடி மின்சாரம் மற்றும் தொலைபேசி கட்டணங்களை ரத்து செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் மாவட்டங்களை புரட்டிப் போட்ட மழை வெள்ளம் ஓரளவு ஓய்ந்து, மக்கள் தட்டுத்தடுமாறி இயல்புநிலைக்குத் திரும்பி வருகின்றனர். 300-க்கும் அதிகமான உயிரிழப்புகள், உடைமைகள் நாசம், பல்லாயிரக்கணக்கான வீடுகள் இழப்பு, வருமானம் இழப்பு, உடல்நிலை பாதிப்பு என சோகங்கள் தொடர்கின்றன.
இதற்கு மத்தியில் ஜாதி, மதம், மொழியைக் கடந்து நீண்ட உதவிக்கரங்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். பல்வேறு துறை ஊழியர்கள், சில அதிகாரி களின் பணி பாராட்டுக்குரியது. பல்வேறு அரசியல் கட்சிகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட மக்கள் நலக் கூட்டியக்கத்தின் களப்பணிகள் குறிப்பிடத்தக்கவை. இந்தப் பேரிழப்பை ஈடுகட்ட மேலும் உதவிகள் தேவைப்படுகின்றன.
இந்த நேரத்தில் மாநில அரசின் சில விரும்பத்தகாத நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் கோபத்தை உருவாக்கியுள்ளன. மீட்புப் பணிகள் குறித்த தகவல் அளிக்காமல் ராணுவத்தை காக்க வைத்ததாகவும், நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பலை நிறுத்தி வைத்திருப்பதாகவும், கர்நாடக அரசின் நிதி உதவிக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றும் ஊடகங்களில் வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.
சாலைகள், தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றி தொற்று நோய்கள் பரவாமல் தடுக்க வேண்டும். மின் விநியோகத்தை முழுமையாக சீரமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அடுப்பு, எரிபொருள், சமையல் பாத்திரங்கள், மளிகைப் பொருட்கள், பாய், போர்வை, நிதி போன்றவற்றை ரேஷன் கடைகள் மூலம் வழங்க வேண்டும்.
குறைந்தது ஒரு மாதத்துக்கான மின்சாரம், தொலைபேசி கட்ட ணத்தை ரத்து செய்ய வேண்டும். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். நிவாரணப் பணிகள் குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும். பல்வேறு தரப்பில் இருந்தும் வரும் உதவிகளை தமிழக அரசு ஒருங்கிணைக்க வேண்டும்.
இவ்வாறு ஜி.ராமகிருஷ்ணன் அறிக்கையில் கூறியுள்ளார்.