ரூபாய் நோட்டு: மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய மத்திய அரசுக்கு எதிராக நவ.16-ல் சிபிஎம் போராட்டம்
ரூபாய் நோட்டுகள் விவகாரத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்போவதாக சிபிஎம் அறிவித்துள்ளது.
நெல்லை: ரூபாய் நோட்டு விவகாரத்தில் மாற்று ஏற்பாடு எதுவும் செய்யாமல் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கிய மத்திய அரசைக் கண்டித்து நாளை மறுநாள் தமிழகம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில சிறப்பு மாநாடு நெல்லையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத், மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர்கள் கே. வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இம்மாநாட்டில் நேற்று நிறைவேற்றப்பட்ட தீர்மானம்:
500, 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது என்ற அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, சாதாரண மக்கள் மிகுந்த துன்பத்துக்கு உள்ளாகியுள்ளனர். இந்த முடிவு ஏற்படுத்தும் விளைவுகளை எதிர்கொள்ள எவ்விதத் தயாரிப்பையும் செய்யாமல் மத்திய அரசு மக்களைத் திண்டாட விட்டிருக்கிறது.அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன; அத்தியாவசியப் பொருட்களை வாங்க முடியவில்லை.
சம்பளம் வழங்குவதில் சிரமம் நிலவுகிறது. சகஜநிலை திரும்ப இன்னும் 3 - 4 வாரங்கள் ஆகும் என்று அரசுத் தரப்பில் கூறப்படுகிறது.
இந்நடவடிக்கை உண்மையிலேயே கருப்புப் பணத்தை மீட்டெடுக்க உதவாது என்பதுடன், சாதாரண மக்களின் வாழ்க்கையை முடக்குவதாகவும் அமைந்திருக்கிறது.
இச்சூழலில், மாற்று ஏற்பாடுகளை அரசு செய்யும் வரை, பழைய ரூபாய் நோட்டுகளின் பயன்பாடு தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு அறைகூவல் விடுத்துள்ளது.
இந்த அறைகூவலை ஏற்று நவம்பர்-16ந் தேதி அன்று தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களிலும், வாய்ப்புள்ள பகுதிகளிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.