திமுக தொண்டர்களைத் தேடட்டும் கலைஞர்... கே.வரதராஜன் விளாசல்
சென்னை: தேடித் தேடித் பார்க்கிறேன், மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் தேடிப் பார்த்தாலும் கிடைக்காது, காரணம் இப்போது அதுதான் முதல் அணி. எனவே அதைத் தேடுவதை விட்டு விட்டு திமுக தொண்டர்களை கருணாநிதி தேடிப் பார்க்கட்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் கே.வரதராஜன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:
தேடித் தேடி பார்க்கிறேன் மூன்றாவது அணி எங்கே இருக்கிறது என்றே தெரியவில்லை என்று தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார் திமுக தலைவர் கலைஞர். அவர் மூன்றாவது அணி என்று தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணியை தேடி இருந்தால் கிடைக்காது. ஏனென்றால் அதுதான் தற்போது முதல் அணி.
இந்த அணியை ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டியலில் தேடினால் கிடைக்காது; சொத்துக் குவிப்பு வழக்கு பட்டியலில் தேடினால் கிடைக்காது; கிரானைட் ஊழலில், தாதுமணல் ஊழலில் தேடினால் கிடைக்காது; மதுபானக் கூட்டணியில் தேடினால்கிடைக்காது.
எனவே, இந்த அணியை தேடுகிற வேலையை விட்டுவிட்டு தேர்தல் களத்தில் காணாமல் போன அந்தக் கால உண்மையான திமுக தொண்டர்களை கலைஞர் தேடினால் நன்றாக இருக்கும் என்று அவர் கூறியுள்ளார்.