3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு-வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவிப்பு: சிபிஎம் மறைமுக குற்றச்சாட்டு
மக்கள் நலக் கூட்டணியில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் 3 தொகுதி தேர்தல்களில் போட்டியிடவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.
சென்னை: அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதி தேர்தல்களை புறக்கணிப்பது தொடர்பாக மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளரும் மதிமுக பொதுச்செயலருமான வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்து முதலில் அறிவித்துவிட்டதாக மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சி மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.
3 தொகுதி தேர்தல்களை மக்கள் நலக் கூட்டணி புறக்கணிக்கும் என அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ அறிவித்திருந்தார். ஆனால் தேர்தலில் போட்டியிட மார்க்சிஸ்ட் கட்சி விரும்பியது; நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த அனுமதி கேட்டிருந்தது என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் மீண்டும் மீண்டும் கூறிவந்தார்.
அதாவது 3 தொகுதி தேர்தல் புறக்கணிப்பு தொடர்பாக வைகோ தன்னிச்சையாகவே முடிவு அறிவித்தார் என திருமாவளவன் மறைமுகமாக குற்றம்சாட்டியிருந்தார். தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் வைகோ தன்னிச்சையாக முடிவெடுத்தார் என மறைமுகமாக குற்றம்சாட்டியுள்ளது.
போட்டியிட விருப்பம்
இது தொடர்பாக இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் ஜி. ராமகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் மற்றும் நிறுத்திவைக்கப்பட்டு தற்போது நடைபெற உள்ள தஞ்சாவூர், அரவக்குறிச்சி தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து 21.10.2016 அன்று மக்கள் நலக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டடம் நடைபெற்றது. மூன்று தொகுதிகள்தான் என்றபோதிலும் அரசியல் போராட்டத்தின் தொடர்ச்சி என்கிற முறையிலும் திமுக, அதிமுகவிற்கு உண்மையான மாற்று மக்கள் நலக் கூட்டணி என்கிற முறையிலும், இத்தேர்தலில் போட்டியிடுவதே சரி என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கருதியது, அதையே கூட்டத்திலும் வலியுறுத்தியது.
மநகூ முடிவு
ஆயினும் போட்டியிடுவதில்லை என மக்கள் நலக் கூட்டணி ஒரு மனதாக முடிவை மேற்கொண்டது, இருப்பினும் கட்சி அணிகள் மற்றும் மாற்று அரசியலை விரும்புவோர் மக்கள் நலக்கூட்டணி இத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என கருத்துக்களைத் தெரிவித்தனர்.
மறுபரிசீலனை
இதையொட்டி 26.10.2016ல் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மக்கள் நலக்கூட்டணியின் முடிவினை மீண்டும் மறுபரிசீலனை செய்ய வேண்டும் எனவும், இதுகுறித்து கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து பேசி போட்டியிட வலியுறுத்துவது என முடிவு மேற்கொள்ளப்பட்டது.
ஒருமித்த கருத்து ஏற்படவில்லை
அதனடிப்படையில், மக்கள் நலக் கூட்டணிக் கட்சிகளுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டது. ஒருமித்த கருத்து ஏற்படாத நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கண்ட மூன்று தொகுதிகளுக்கான தேர்தலில் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்
இவ்வாறு ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.