பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் தர எதிர்ப்பு.. ஆட்சியர் அலுவலகம் முற்றுகை.. நெல்லையில் பரபரப்பு
நெல்லை: தாமிரபரணியில் தண்ணீர் எடுக்க அனுமதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் எடுக்க பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வலியுறுத்தியும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் நேற்று உண்ணாவிரதம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில். பெண்கள், பொதுமக்கள், மாணவர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க அனுமதித்ததைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது தாமிரபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும், குளிர்பான நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்று தண்ணீரை கொடுக்கக்கூடாது என அவர்கள் முழக்கமிட்டனர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினரின் இந்த திடீர் போராட்டத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!