தாமிரபரணி நீரை எடுக்காதே.. கோக், பெப்சியை சாலையில் கொட்டி சிபிஎம் போராட்டம்
தாமிரபரணியில் இருந்து வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு நீர் வழங்குவதை ரத்து செய்யக் கோரி சிபிஎம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது, கோக் பெப்சி ஆகிய குளிர்பானங்களை சாலையில் கொட்டி போராட்டக்காரர்கள்
தூத்துக்குடி: கோக், பெப்சியை சாலையில் கொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு போராட்டம் நடத்தினார்கள்.
கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும், உள்நாட்டு குளிர்பான தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது, வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டியதோடு, பொதுமக்களுக்கு எலுமிச்சை சாறு குளிர்பானம் வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
பாழாய் போகும் தாமிரபரணி
கோக், பெப்சி உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களை தயாரிப்பதற்கு தேவையான தண்ணீரை நெல்லை தாமிரபரணியில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு நீண்ட காலமாக தமிழக மக்களிடம் இருந்து எதிர்ப்பு இருந்தும் அந்த நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமை இன்னும் ரத்து செய்யப்படாமல் உள்ளது.
பெப்சியை சாலை கொட்டி..‘
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றின் நீரை எடுப்பதற்கான உரிமத்தை ரத்து செய்யக் கோரி சிபிஎம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. அப்போது கோக், பெப்சி குளிர்பானங்களை சாலையில் கொட்டி வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான கோஷங்களை போராட்டக்காரர்கள் முழங்கினார்கள்.
எலுமிச்சை சாறு வழங்கி...
போராட்டக்காரர்கள் பொதுமக்களுக்கு கோக் மற்றும் பெப்சி குடிப்பதால் ஏற்படும் தீங்கு பற்றியும், அதனால் ஏற்படும் நோய்கள் பற்றியும் எடுத்துரைத்தனர். அவர்களுக்கு எலுமிச்சை சாறு வழங்கினார்கள். மேலும் பொதுமக்கள் நச்சு தன்மை வாய்ந்த வெளிநாட்டு குளிர்பானங்களை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
கோரிக்கை முழக்கம்
கோக், பெப்சி நிறுவனங்களுக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தண்ணீர் வழங்குவதை நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தாமிபரணி ஆற்றை பாதுகாக்க வேண்டும். வெளிநாட்டு குளிர்பானங்களை தடை செய்து உள்நாட்டு குளிர்பானங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்டக் கோரிக்கைகளை முன் வைத்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.