நிர்மலாதேவி விவகாரம்: ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சிபிஎம் முற்றுகை போராட்டம்
ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் சிபிஎம் முற்றுகை போராட்டம் நடத்தியது.
சென்னை: பேராசிரியர் நிர்மலாதேவி விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.
நிர்மலாதேவி விவகாரத்தில் ஆளுநர் பன்வாரிலாலுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் அண்மையில் ஜனாதிபதிராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். ஆகையால் ஆளுநர் பன்வாரிலாலை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி இருந்தார்.
இதே கோரிக்கையை முன்வைத்து சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தினர். அப்போது ஆளுநர் அமைத்த சந்தான விசாரணை கமிஷனை ரத்து செய்யவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இப்போராட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உட்பட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.