ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு!
ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளது.
கோவை: ஆர்கே நகர் இடைத்தேர்லில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும் டிசம்பர் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் அதிமுக, திமுக, அதிமுக அம்மா கட்சி ஆகியவை கடந்த முறை நிறுத்திய வேட்பாளர்களையே இம்முறையும் களமிறக்கியுள்ளன.
ஆனால் கடந்த முறை வேட்பாளரை அறிவித்த மார்க்சிஸ்ட் கட்சி இம்முறை வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்நிலையில் அக்கட்சியின் மாநிலக் குழுக்கூட்டம் கோவையில் நடைபெற்றது.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட போவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன் கோவையில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது ஆர்கே நகர் இடைத்தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என அவர் கூறினார். மக்கள் நலனில் அக்கறையில்லாத அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் பாடம் புகட்டும் வகையில் திமுகவுக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தனது மேடையில் இருந்து திமுகவை ஆதரித்து பிரச்சாரம் செய்யும் என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். ஆர்கே நகர் இடைத்தேர்தலில் பணம் கொடுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.