பாஜகவுக்கு எதிரான அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்க களம் இறங்குகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
சென்னை: பாஜகவுக்கு எதிராக போராட, நாடு முழுவதும் பல்வேறு அரசியல் சக்திகளை ஒருங்கிணைக்க தீவிரமாக முயலப் போவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்ட் கட்சியின் 21 வது மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் நேற்று தொடங்கியது. 4 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டை சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா மாநாட்டு கொடி ஏற்றி தொடங்கி வைத்தார். முன்னதாக காலை 9 மணிக்கு செந்தொண்டர் அணிவகுப்பு நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வெண்மணி தியாகிகள் நினைவு கொடி, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு கொடி, பி.ராமமூர்த்தி நினைவு ஜோதி, சிங்காரவேலர் நினைவு ஜோதி, ஜீவானந்தம் நினைவு ஜோதி, வி.பி.சிந்தன் நினைவு ஜோதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து நினைவு கொடி மற்றும் ஜோதி கொண்டுவரப்பட்டது.
மாநாட்டுக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். மாநாட்டின் தொடக்கமாக மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மறைந்த தியாகிகள், கலைஞர்கள் மற்றும் பிரமுகர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. வரவேற்புக்குழு தலைவர் பீம்ராவ் வரவேற்புரையாற்றினார்.
பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொன்விழா மலரை கட்சியின் அகில இந்திய பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் வெளியிட மாநிலக்குழு உறுப்பினர் வே.மீனாட்சி சுந்தரம் பெற்றுக்கொண்டார். இதனைதொடர்ந்து கட்சி, கட்சியின் நூல்கள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளும் வகையிலான வலைத்தளங்களை பிரகாஷ் காரத் தொடங்கி வைத்தார்.
மாநாட்டைத் தொடங்கி வைத்து காரத் பேசுகையில்,
இந்துத்வா கொள்கை, நவீன தாராளமயமாக்கல் கொள்கை மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உதவியாக பா.ஜ.க. அரசு துணை நிற்கிறது. இதனை பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் தங்கள் தாக்குதல்களை முன்னிறுத்துகிறார்கள். மோடி அரசு பதவிக்கு வந்த 9 மாதத்தில் விவசாயிகள், ஏழை, எளிய மக்களை பாதிக்கும் தேசியமயமாக்கலுக்கு எதிரான 9 அவசர சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
பணக்காரர்களுக்கும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவாக செயல்பட்டு ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தில் மோடி தலைமையிலான அரசு பாதிப்பினை ஏற்படுத்துகிறது. கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்களை கர் வாபசி என்ற தாய் மதத்துக்கு கட்டமாயமாக மதமாற்றம் செய்வதால் சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. இது ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக அமைகிறது.
பா.ஜ.க.வின் வகுப்புவாத சக்திக்கு எதிராக போராட அரசியல் சக்திகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றாக இணைக்கும். தமிழகத்தில் 2 திராவிட கட்சிகள் செயல்படுகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி கண்டிப்பாக வலுப்பெற்று துடிப்பான கட்சியாக உருவெடுக்கும். தன்னுடைய சொந்த பலத்தை அதிகரிக்க இந்த மாநாடு முக்கியமானதாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசும்போது, பெரும்பான்மை கிடைக்காததால் கொள்கை ரீதியாகவும், திட்ட ரீதியாகவும் பாராளுமன்றத்தில் பா.ஜ.க.வை எதிர்க்க யாரும் இல்லை. இதனை எதிர்க்கவேண்டிய பொறுப்பு இடதுசாரிகள் மீதுதான் விழுகிறது. நம் தலைவர்கள் கூறியது போல நாம் இருவழிகளில் பயணத்தை மேற்கொண்டாலும் ஒரே நோக்கத்திற்காக பயணத்தை தொடங்கவேண்டும் என்றார்.