மெரினாவில் கருணாநிதி உடலடக்கம்.. அரசியல் வெறுப்பின்றி நடக்குமாறு மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்!
மறைந்த திமுக தலைவரின் உடல் அடக்கத்தை மெரினாவில் நடத்திட அனுமதிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி உடல் அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கித் தராமல் தமிழக அரசு செயல்படுவது காழ்ப்புணர்ச்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அரசியல் விருப்பு, வெறுப்பில்லாமல் நடந்து கொள்ள வேண்டும் என்று அது கேட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடலடக்கத்தை, மெரினாவில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று திமுக கோரியுள்ளது. ஆனால், இதை ஏற்க தமிழக அரசு மறுத்துவிட்டது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
தமிழகத்ததினுடைய மூத்த தலைவராகவும், ஐந்து முறை முதலமைச்சராகவும், எதிர்கட்சி தலைவராகவும், தமிழக அரசியலில் முத்திரைப் பதித்தவர் கருணாநிதி. அவருடைய உடல் அடக்கம் செய்திட, சென்னை மெரினா கடற்கரையில் இடம் ஒதுக்கித் தருவதே பொருத்தமானதாகும்.
இத்தனை சிறப்புகள் படைத்த ஒரு மூத்த அரசியல் தலைவருக்கு, மெரினா கடற்கரையில் இடம் தர தமிழக அரசு மறுத்திருப்பது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டதாகும். இப்பிரச்சனையில் அரசியல் விருப்பு, வெறுப்பின்றி தமிழக அரசு நடந்து கொள்ள வேண்டும். கருணாநிதி உடலை மெரினாவில் அடக்கம் செய்திட இடம் ஒதுக்கி தர வேண்டும்.
இவ்வாறு அறிக்கையில் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.