சதுர்த்திக்கு 'ஓசி' லட்டு குறைவாக கொடுத்ததால் கோவை 'மகாலட்சுமி' பேக்கரியை சூறையாடிய இந்து முன்னணி!
கோவை: கோவையில் விநாயகர் சதுர்த்தியன்று ஓசியில் லட்டுகளை குறைவான எண்ணிக்கையில் கொடுத்ததால் 'மகாலட்சுமி பேக்கரி'யை இந்து முன்னணியின் சூறையாடியதாக மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதைக் கண்டித்து இந்து முன்னணியினர் கோவையில் வெறியாட்டம் போட்டனர்.
சசிகுமார் படுகொலைக்கு கண்டனம் என்ற பெயரில் கோவையில் பல கடைகளை சூறையாடுவதை மட்டுமே இலக்காக வைத்து இந்து முன்னணியினர் செயல்பட்டிருக்கின்றனர். ஒரு செல்போன் கடையில் நுழைந்து செல்போன்களை கொள்ளையடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர வைத்திருந்தது.
தற்போது கோவையில் முகாமிட்டிருக்கும் மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் உ. வாசுகி, இந்து முன்னணியினரின் வெறியாட்டம் குறித்து தெரிவித்திருக்கும் தகவல்கள்:
18 கி.மீ. ஊர்வலம்
மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் மக்களுக்கும் உடமைகளுக்கும் பாதுகாப்பு கொடுக்க முழுமையாகத் தவறி விட்டன. தெரிந்தே நடந்ததாகவே ஊகிக்க வேண்டியிருக்கிறது. இறுதி ஊர்வலம் 18 கிமீ தொலைவு செல்ல அனுமதி ஏன் அளிக்கப்பட்டது? கல்லெறி மற்றும் சூறையாட லின் போது போலீஸ் என்ன செய்தது? சில இடங்களில் போன் செய்தும் ஸ்டேஷனில் எடுக்கவில்லை. எஸ்.பி.க்கு செய்தால் ஸ்டேஷனுக்கு செய்யுங்கள் என்று சொல்லப் பட்டது.
தப்பித்த குடும்பம்
துடியலூரில் ஓர் இசுலாமிய குடும்பத்தில் இரண்டு நாட்களில் திருமணம். கட்சி தோழர்கள் முன் கூட்டியே தகவல் கொடுத்து அவர்களை அப்புறப்படுத்தியதால் தப்பித்தனர்.
தடுத்த வாலிபர் சங்கத்தினர்
துடியலூரில் ஒரு பகுதியில் கணிசமாய் இசுலாமியர்கள். அச்சத்தில் நடுங்கியவர்களைக் காக்க அங்கிருந்த மாதர், வாலிபர் சங்க உறுப்பினர்கள் திரண்டு பகுதியின் நுழைவிடத்தில் வந்து நின்று விட்டனர். உயிரைத் துச்சமென மதித்து களத்தில் நின்ற அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
பொட்டு வைத்திருந்த இஸ்லாமிய பெண்
அங்கிருந்த 5 வயது இசுலாமிய சிறுமி பொட்டு வைத்திருந்தாள். நம்மிடம் விளக்கினாள் - பொட்டு வைத்திருந்தால் ஒன்றும் செய்ய மாட்டார்கள், இந்துக்கள் என விட்டு விடுவார்கள். நமக்கு நெஞ்சே வெடித்து விட்டது.
மகாலட்சுமி பேக்கரி
துடியலூர் மகாலட்சுமி பேக்கரியும் சுத்தமாய் திருடப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்திக்கு தலா 2000 இரண்டு கோஷ்டிகள் கேட்ட போது இவர் 500 கொடுத்தது தான் காரணம். கடைகளின் உரிமையாளர்கள் வாய் விட்டு அழுகிறார்கள்.
இவ்வாறு உ.வாசுகி கூறியுள்ளார்.