தை பொங்கலுக்குள் விலைவாசி ஏறாத மக்களாட்சி மலரும் - சொல்வது சி.ஆர் சரஸ்வதி
ஜெயலலிதா இருந்தால் விலையேற்றம் நடந்திருக்குமா? என்று சி.ஆர். சரஸ்வதி கேட்டிருக்கிறார்.
திருச்சி: தை பொங்கலுக்குள் தமிழகத்தில் விலைவாசி ஏறாத மக்களாட்சி மலரும் என்று அதிமுக அம்மா அணியின் செய்தி தொடர்பாளர் சி.ஆர். சரஸ்வதி கூறியுள்ளார்.
அம்மாவின் திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல்படுத்தப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள சி.ஆர் சரஸ்வதி, ஜெயலலிதா இருந்திருந்தார் சர்க்கரை விலை உயர்த்தப்பட்டிருக்காது என்றும் கூறியுள்ளார்.
அதிமுக அம்மா அணியின் சார்பில் தாராநல்லூரில் அதிமுக தொடங்கப்பட்டதன் 46-ம் ஆண்டுவிழா பொதுக்கூட்டம், மாநகர் மாவட்ட கழக செயலாளர் ஜெ.சீனிவாசன் தலைமையில் நடைபெற்றது.
ரேசன் சர்க்கரை விலை உயர்வு
நவம்பர் 1-ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் 13.50 ரூபாய் இருந்த சர்க்கரை 25 ரூபாய் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஜெயலலிதா ஆட்சியில்
ஜெயலலிதா இருந்தால் விலையேற்றம் நடந்திருக்குமா? 1கோடியே 80 லட்சம் மக்கள் வைத்திருக்க கூடிய ரேஷன் அட்டைக்கு இதனை நடைமுறைப்படுத்தியுள்ளது கண்டிக்கத்தக்கது.
ஏழைகளுக்கு திருமணம்
ஓபிஎஸ், இபிஎஸ் கட்அவுட் வைக்க மக்களின் வரிப்பணத்தை செலவு செய்யும் அரசு, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் 100 ஏழைகளுக்கு திருமணம் செய்து வைத்திருக்கலாம். ஏழைகளின் கல்விக்கு உதவி புரிந்திருக்கலாம் இதனைத் தவிர்த்து சுயவிளம்பரம் செய்துள்ளனர் என குற்றம்சாட்டினார்.
தை பொங்கலில் ஆட்சி மாற்றம்
ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் தற்போது செயல்படுத்தப்படவில்லை. வரும் தைப்பொங்கலுக்குள் மக்களுக்கு விலைவாசி ஏறாத, மக்களாட்சியை ஏற்படுத்தப்படும் என்று கூறினார். இவர் எதை மனதில் வைத்து இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.
தினகரன் சொன்னது ஏன்?
டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு பேசும் பேசும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி தை பொங்கலுக்குள் மாறும் என்றும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றும் கூறினார். தற்போது சி.ஆர் சரஸ்வதியும் தை பிறந்தால் வழி பிறக்கும் என்று கூறினார். இப்போது சி.ஆர். சரஸ்வதியும் கூறியுள்ளதால் தை மாதத்தில் என்ன நடக்குமே என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.