இரு அணிகளும் ஒன்று பட வேண்டும்.. சிஆர் சரஸ்வதி விருப்பம்!
இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார்.
சென்னை: இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அதிமுக செய்தி தொடர்பாளர் சிஆர் சரஸ்வதி தெரிவித்துள்ளார். எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுவதாகவும் சிஆர் சரஸ்வதி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
அதிமுக செய்திதொடர்பாளராக அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்டவர் சிஆர் சரஸ்வதி. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலாவுக்கும், டிடிவி தினகரனுக்கும் தீவிர ஆதரவாளர் ஆனார்.
மேலும் ஓபிஎஸ் சசிகலாவை எதிர்த்து தனி அணியாக செயல்பட தொடங்கியதால் அவரையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இதனால் மக்களின் வெறுப்புக்கு ஆளானார். ஆர்கே நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது, பொதுமக்கள் அவர் மீது தக்காளி உள்ளிட்டவற்றை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத்தொடர்ந்து தினகரன் தரப்புக்கு ஏற்பட்ட தொடர் சறுக்கல்களால் தொலைக்காட்சிப் பக்கம் தலைக்காட்டாமல் இருந்தார் சிஆர். சரஸ்வதி. இந்நிலையில் சிஆர் சரஸ்வதி இன்று செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது இரு அணிகளும் ஒன்று பட வேண்டும் என அவர் கூறினார். ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் அணிகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்பது தான் தனது விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார். இரு அணிகளும் ஒன்றிணைந்து கட்சியை சிறப்பாக நடத்த வேண்டும் என்றும் அதிமுக செய்தி தொடர்பாளரான சி.ஆர். சரஸ்வதி வேண்டுகோள் விடுத்தார்.