தொடரும் பட்டாசு விபத்துக்கள் எதிரோலி... குடோன்கள், கடைகளில் போலீசார் அதிரடி ரெய்டு
நெல்லை: பட்டாசு விபத்துகள் தொடர் கதையாகி வருவதால் தமிழகம் முழுவதும் குடோன்கள் மற்றும் கடைகளில் போலீசார் அதிரடியாக தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீபாவளிக்கு இன்னும் ஐந்து நாட்களே உள்ள நிலையில் ஜவுளி எடுத்தல், நகை வாங்குதல் உள்ளிட்டவைகளில் தீவிரமாக உள்ளனர். தீபாவளிக்கு பட்டாசு கடைகளும் தயாராகி வருகின்றன.
இந்நிலையில் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசு விபத்துக்கள் அதிகரித்து வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சாத்தூரில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு இரண்டு பேர் இறந்தனர். அதே போன்று ஆள் இல்லாத பட்டாசு குடோனில் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டது.
மேலும் சிவகாசியில் பட்டாசு குடோன் ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதேபோல், கோவையில் ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் வைக்கப்பட்டிருந்த கிப்ட் பாக்ஸ் தீப்பிடித்து வெடித்ததில் ஐஏஎஸ் பயிற்சி மாணவன் பலியானான்.
இப்படியாக பட்டாசு விபத்துக்கள் தொடர்ந்து வருவதால், தமிழகம் முழுவதும் பட்டாசு குடோன்கள் மற்றும் கடைகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கங்கைகொண்டான் அருகே ஆலவந்தான் கிராமத்தில் பெட்டி கடையில அனுமதியின்றி பட்டாசுகளை விற்றதாக மாதாம்மாள் என்பவரை போலீசார் கைது செய்தனர். இதேபோல், சேரன்மகாதேவி பகுதியில் குடோனில பதுக்கி வைத்திருந்த ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்து அதே பகுதியை சேர்ந்த ஜார்ஜ் உசேனை கைது செய்தனர்.
வீரவநல்லூரில் குடோனில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வினோத் என்பவர் கைது செய்யப்பட்டார்.