பட்டாசு விற்பனைக்கு சிறப்பு சட்டம் கோரி சிவகாசி ஆலைகளில் வேலை நிறுத்தப் போராட்டம்
பட்டாசு விற்பனைக்கு சிறப்பு சட்டம் கோரி சிவகாசி ஆலைகள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
சிவகாசி : வடமாநிலங்களில் பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி சிவகாசியில் பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளன.
இந்திய அளவில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி பட்டாசு உற்பத்திக்கு பெயர் போனது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இந்த மாவட்ட மக்களுக்கு பட்டாசு தயாரிப்பு தான் மிக முக்கிய தொழில் ஆகும்.
இங்கு தயாரிக்கப்படும் பட்டாசுகள் வட மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. தீபாவளி பண்டிகை முடிந்தவுடன் அடுத்த ஆண்டுக்கான பட்டாசு தயாரிப்பிற்கு முன்பணமும் கொடுப்பது வடமாநில வியாபாரிகள் வழக்கம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் பட்டாசு வெடிப்பதால் காற்று மாசு ஏற்படுவதாக கூறி மூன்று சிறுவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நிலுவலையில் உள்ளது.மேலும், இந்த ஆண்டு டெல்லி உள்ளிட்ட சில மாநிலங்களில் காற்று மாசுபாட்டால் பட்டாசு வெடிக்க தீபாவளி சமயத்தில் தடை விதிக்கப்பட்டது.
இந்த வழக்கில் இன்னமும் தீர்ப்பு வராததால், வடமாநில பட்டாசு வியாபாரிகள் பெரும் குழப்பத்தில் உள்ளனர். இதனால் சிவகாசியில் ஆலைகளுக்கு பட்டாசுக்கு முன்பணம் கொடுக்கவும், ஆர்டர் கொடுக்கவும் தயக்கம் காட்டி வருகின்றனர்.
நாடு முழுவதும் பட்டாசுக்கு தடை விதிக்கப்பட்டால் பட்டாசுகளை விற்பனை செய்ய முடியாது என வட மாநில வியாபாரிகளிடம் இருந்து சீசன் ஆப் ஆர்டர் வரவில்லை என்று ஆலை உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.
இதனால் சுமார் 8 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பட்டாசு தொழிலுக்கு சிறப்பு சட்டம் இயற்ற வலியுறுத்தி சிவகாசியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் துவங்கியுள்ளது.