நான்காவது நாளாக தொடரும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம்.. தொழிலாளர்கள் அவதி
நான்காவது நாளாக இன்றும் பட்டாசு உற்பத்தி ஆலைகள் வேலைநிறுத்தம் தொடர்ந்து வருகிறது.
சிவகாசி : பட்டாசு வெடிக்க நாடு முழுக்க தடை கோரும் வழக்கில் சட்ட திருத்தம் கோரி பட்டாசு ஆலை உரிமையாளர்கள் நான்காவது வேலைநிறுத்தம் செய்து வருகின்றனர். இதனால் தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.
பட்டாசு வெடிப்பதால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவே, நாடு முழுவதும் பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பட்டாசு உற்பத்தி குறித்து மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பட்டாசு உற்பத்திக்கு தடை விதிக்கக்கோரும் வழக்கை விரைந்து முடிக்கக் கோரியும், மத்திய அரசு சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தியும் விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகள் கடந்த 26ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.
இதன் காரணமாக 800க்கும் அதிகமான பட்டாசு ஆலைகள் மூடப்பட்டு உள்ளதால், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். இந்த போராட்டம் நான்காவது நாளாக இன்றும் தொடர்வதால் தினக்கூலி ஊழியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், அகில இந்திய பட்டாசு சங்க கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நடந்தது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பட்டாசு விற்பனையாளர்கள், உற்பத்தியாளர்கள், சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பட்டாசு விற்பனைக்கு தடை வழக்கில் தமிழக அரசு தன்னையும் ஒரு பிரதிவாதியாக நியமிக்க கோருவது, சுற்றுச்சூழல் விதியில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதுகுறித்து ஆலை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், பட்டாசு மற்றும் அதனைச் சார்ந்த உப தொழில் கூட்டமைப்பு சங்கத்தினர் பட்டாசு தடை வழக்கில் தங்களையும் பிரதிவாதிகளாக சேர்க்க கோரி உச்சநீதிமன்றத்தில் விரைவில் மனுத்தாக்கல் செய்ய உள்ளனர். மேலும் இதுகுறித்து பிரதமர், மத்திய அமைச்சர்களிடம் முறையிட உள்ளோம் என்று தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழிலாளி ஒருவர் கூறுகையில், பட்டாசு உற்பத்தியாளர்களின் தொடர் வேலை நிறுத்தம் காரணமாக நாள் ஒன்றுக்கு ரூ. 15 கோடி வரை வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பின் பட்டாசு ஆர்டர்கள் அதிகளவில் வரும் என்று எதிர்பார்த்து இருந்தோம். இந்த வழக்கால் ஆர்டர்கள் கொடுக்க தயக்கம் காட்டி வருகின்றனர். தினக்கூலிகளான நாங்கள் வாழ்வாதாரம் இன்றி பாதிக்கப்பட்டு உள்ளோம் என்று தெரிவித்து உள்ளனர்.