மெட்ரோ ரயில் சுரங்கப்பணி வீடுகளில் விரிசல்... அச்சத்தில் சிந்தாரிப்பேட்டை மக்கள்
சென்னை: மெட்ரோ ரயில் பணியால் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. மண்ணிற்குள் வீடுகள் இறங்கியதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சென்னையில் மெட்ரோ ரயில் உயர்மட்ட பாதையிலும், சுரங்கப் பாதையிலும் செல்லக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றன. கோயம்பேடு - ஆலந்தூர் இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரயில் பணிகள் நிறைவடைந்து விரைவில் சேவை தொடங்க உள்ளன.
சுரங்கப்பாதையில் மெட்ரோ ரயில் செல்வதற்கான பணிகள் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகின்றன. சென்ட்ரலில் இருந்து சிந்தாதிரிப்பேட்டை மேதின பூங்காவிற்கும், அங்கிருந்து அரசின் புதிய பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை, அண்ணாசாலை வழியாக மீனம்பாக்கம் விமான நிலையம் வரை மெட்ரோ ரயில் இயக்கப்பட உள்ளன.
சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் கடந்த சில நாட்களாக சுரங்கப்பாதை பணிகள் இரவு-பகலாக நடைபெற்று வருகின்றன. சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அய்யாவு முதலி தெருவில் உள்ள 5 வீடுகளில் நேற்று மாலை திடீரென விரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் வீடுகள் இரண்டு அடி அளவிற்கு மண்ணில் புதைந்தாகவும் வீட்டு உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் பணியால் அங்குள்ள சுதர்சனம் என்பவரின் வீட்டில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவரது வீட்டில் 5 பேர் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். ஒரு பகுதியில் சுதர்சனம் பயன்படுத்தி வருகிறார். வாடகைக்கு வசித்து வரும் முத்துகிருஷ்ணன் மற்றும் சாமிகேசவனின் மனைவி ராஜகுமாரி ஆகியோர் வீட்டின் கதவை திறக்க முடியாமல் சிரமப்பட்டனர். அதன் பின்னர் பார்க்கும் போது கதவு கீழே இறங்கி இருந்ததை கண்டுபிடித்தனர். வீட்டின் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். சுதர்சனம் வீட்டையொட்டி வீடுகளிலும் லேசான விரிசல் இருந்தது. இதுபற்றி மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அந்தப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர் அங்கு பொதுமக்கள் நடமாட்டத்தை போலீசார் கட்டுப்படுத்தினர். இந்த பகுதியில் நடைபெற்று வரும் மெட்ரோ ரயில் சுரங்கப்பணியால் ஏற்பட்ட அதிர்வின் காரணமாகவே வீடுகளில் விரிசல் ஏற்பட்டிருப்பதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
மெட்ரோ ரயில் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். சுதர்சனம் வீடு பாதுகாப்பற்ற சூழ்நிலையில் இருந்ததால் அதனை பூட்டி சீல் வைத்தனர். வீட்டில் வசித்து வந்தவர்களை உள்ளே அனுமதிக்கவில்லை. அங்குள்ள ஒரு ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த அய்யாவு முதலி தெருவில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன. விரிசல் விழுந்த வீடுகளில் இருந்தவர்களை பாதுகாப்பான இடத்திற்கு காவல் துறையினர் வெளியேற்றிவிட்டதாக கூறியுள்ளனர். மேலும் அப்பகுதியில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்த உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.