உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு... பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி நடத்தும் அய்யாதுரை பாண்டியன்
தென்காசி: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் 12 நாட்களுக்கு பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன.
திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நடத்தும் இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை காண நெல்லை மற்றும் தென்காசி மாவட்ட இளைஞர்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.
போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு பொங்கலுக்கு முந்தைய நாளான, அதாவது இறுதிப்போட்டி நடைபெறும் ஜனவரி 13-ம் தேதியன்று மாலை பரிசளிப்பு விழா நடைபெறுகிறது. இதனிடையே கிரிக்கெட் போட்டியை தொடங்கி வைத்த அய்யாதுரை பாண்டியன், போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு உற்சாகம் தரும் வகையில் சிறிது நேரம் அவரும் களமாடினார்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் மற்றும் கடையநல்லூரில் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் அதில் ஒரு பிரம்மாண்டத்தை காட்டும் அய்யாதுரை பாண்டியன், உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு நடத்தப்படும் கிரிக்கெட் தொடரிலும் பிரம்மாண்டத்தை காட்டியிருக்கிறார். இந்த கிரிக்கெட் போட்டி முடிந்த பின்னர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கடையநல்லூர் தொகுதியில் ஏராளமான பொருட்செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார் அய்யாதுரைபாண்டியன்.
மக்கள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று ஒரு புறம் வெகுஜன பொதுமக்களின் ஆதரவை பெற்று வரும் அதே சூழலில், மற்றொருபுறம் கிரிக்கெட் போட்டிகள் மூலம் இளைஞர்களின் ஆதரவை ஈர்க்கும் நடவடிக்கையாக இது கருதப்படுகிறது.