சென்னை வெள்ளத்தில் முதலைகள் சுற்றுகின்றனவா?: முதலை வங்கி விளக்கம்
சென்னை: வெள்ளத்தில் முதலைகள் எதுவும் தப்பித்துச் செல்லவில்லை என்று சென்னை அருகே உள்ள சென்னை முதலை வங்கி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்ததால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. அடுக்குமாடி குடியிருப்புகளில் கூட வெள்ளநீருடன் சேர்ந்து மீன்கள், தவளைகள், பாம்புகள் விளையாடுகின்றன. இந்நிலையில் சென்னை அருகே உள்ள முதலை வங்கியில் இருந்து முதலைகள் தப்பி ஊருக்குள் புகுந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.
இது குறித்து சென்னை முதலை வங்கி அறக்கட்டளை ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
Please don't spread the wrong news. There has been no containment issue. All our crocs are safely contained. pic.twitter.com/1Dls9ShF61
— Croc Bank (@MCBT_India) December 2, 2015
எங்கள் வங்கியில் இருந்து முதலைகள் தப்பித்துவிட்டதாக ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் பரவிய செய்தியில் உண்மை இல்லை. முதலைகள் அனைத்தும் பத்திரமாக உள்ளன. முதலைகள் தப்பிவிடாமல் இருக்க எங்கள் ஊழியர்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பில் உள்ளனர்.
பாதுகாப்பு தான் எங்களுக்கு முக்கியம். ஏற்கனவே பல பிரச்சனையில் சிக்கியுள்ள நகரில் மேலும் பீதியை கிளப்பாதீர்கள். அனைவரும் பத்திரமாக இருந்து கொள்ளுங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.