போச்சுடா... சென்னை பண்ணையில் இருந்து 20 முதலைகள் தப்பி வெள்ளத்தில் ஊடுருவியதாக வதந்தி!
சென்னை: சென்னை பண்ணையில் இருந்து 20 முதலைகள் தப்பி வெள்ளத்தோடு வெள்ளமாக ஊடுருவியதாக வதந்தி பரவியதால் தென்சென்னைவாசிகள் பெரும் அச்சத்தில் உறைந்து போயினர். ஆனால் பண்ணையில் இருந்து முதலைகள் எதுவும் தப்பவில்லை என்று முதலை பண்ணை விளக்கம் கொடுத்துள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
சென்னைவாசிகளின் இரவுகளை தூங்கா இரவுகளாக்கிவிட்டது பெருமழை வெள்ளம்... இவற்றோடு அத்தனை ஏரிகளும் நிரம்பி வழிய ஊரெங்கும் வெள்ளம்..
ஒட்டுமொத்தமே சென்னையே பெருங்கடலாக காட்சியளிக்கிறது. குறிப்பாக சென்னை புறநகர்கள் வெள்ளத்தால் பெரும் துயரத்தில் மூழ்கிப்போயுள்ளன.
இந்த நிலையில் சமூக வலைதளங்களில் சென்னை அருகே உள்ள வடநெமிலி முதலை பண்ணையில் வெள்ளத்தால் 20 முதலைகள் தப்பி வெளியேறிவிட்டன; இவை வெள்ளத்தோடு வெள்ளமாக ஊடுருவியுள்ளன என தகவல் தீயாகப் பரவியது.
ஏற்கனவே மழைவெள்ளத்தால் பாம்புகள், விஷ ஜந்துகள் வீடுகளுக்குள் குடியேறிய அனுபவத்தை எதிர்கொண்ட தென்சென்னை வாசிகளுக்கு இந்த தகவல் பெரும் பீதியை கிளப்பிவிட்டது. ஆனால் ஆறுதலாக, முதலை பண்ணையில் இருந்து எந்த முதலையும் தப்பவில்லை; அப்படி வெளியான வதந்திகளை நம்ப வேண்டாம் என நிர்வாகம் விளக்கம் கொடுத்திருக்கிறது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வேளச்சேரியில் மழை வெள்ளத்தில் முதலை ஊருருவி வந்து பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.