தொடரும் துயரம்.. பயிர்கள் கருகியதால் விவசாயி தீக்குளித்து தற்கொலை.. திருச்சியில் சோகம்
கிணற்று நீரும் வற்றி பயிர்கள் கருகியதால் சோமரசம் பேட்டை அருகில் விவசாயி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனால் திருச்சியில் சோகம் நிலவி வருகிறது.
திருச்சி: பயிர்கள் கருகியதால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வது தொடர்ந்து வருகிறது. திருச்சி அருகில் இன்று விவசாயி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை அருகே உள்ளது அத்வத்தூர் கொய்யாத்தோப்பு கிராமம். இந்த கிராமத்தில் வாழ்ந்த விவசாயி கணேசன், காவிரி நீர் இல்லை என்றாலும் கிணற்று நீரை நம்பி தனது நிலத்தில் விவசாயம் செய்துள்ளார்.
இந்நிலையில், கிணற்றிலும் நீர் வற்றி காய்ந்துவிட்டது. இதனால் பயிர்கள் நீரின்றி கருகியது. இதனால் மனம் உடைந்து கணேசன் காணப்பட்டார். விவசாயம் பொய்த்துப் போன நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த கணேசன், மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
விவசாயி கணேசன் தற்கொலை குறித்து சோமரசம்பேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் வறட்சி காரணமாக விவசாயிகள் தற்கொலை செய்வது தொடர்ந்து வருகிறது. 400க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளனர். இதனை தடுக்கவும் உரிய முறையில் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவும் விவசாயிகள் தொடர்ந்து கோரி வருகின்றனர்.