இன்றோடு 30 நாள்.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி?
தினந்தோறும் கருணாநிதி சமாதிக்கு பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கிறார்கள்.
Recommended Video
சென்னை: இன்றோடு 30 நாள் ஆகிறது.... எப்படி இருக்கிறது கருணாநிதி சமாதி?
பலவித ரசனைகளால் உருவானவர்தான் கருணாநிதி. அவரது ரசனைக்கேற்றபடியே அவரது சமாதியும் தினம் தினம் புதுபுது அலரங்களால் பளிச்சிட்டு நிற்கிறது.
தினமும் ஏதாவது ஒரு பழம், அல்லது பூக்களினால் உதயசூரியன் பிரகாசிக்கிறது. அந்த பிரகாசத்தில் "அப்பா, இதோ வந்துவிட்டேன்" என்றுகூறி மெரினா காற்றில் விடியு வேளையிலேயே படபடத்து அடித்துகொள்கிறது 'முரசொலி'.
கருப்பு கண்ணாடி
முரசொலி வந்து அங்கு அமர்ந்ததுமே அங்கு வைக்கப்பட்டிருக்கும் பேனாவும், கருப்புக் கண்ணாடியும் சந்தோஷத்தில் அசைந்து கொடுக்கின்றன. அது சமாதி இல்லை... உயிரற்ற பந்தங்களின் ஒன்றுகூடல்! தன் தலைவனுக்கு தங்கள் இருத்தலை ஏதாவது ஒரு விதத்தில் இணைத்து கொள்ளும் பாசம்!
வெளிநாட்டு ஆட்கள்
சமாதியில் எப்போதுதான் கூட்டம் இல்லை... பகலெல்லாம் கூட்டம் இருக்கிறதே என்று ராத்திரி நேரங்களில் வந்தால் அப்போதும் மக்கள் தலைகள்! வெளியூர்களிலிருந்து எதற்காக சென்னை வருகிறார்களோ இல்லையே கால்கள் தானாக மெரினாவை நோக்கி நடக்க ஆரம்பித்து விடுகின்றன. இதில் ஆங்காங்கே வெளிநாட்டு தலைகளும் உண்டு!
மொத்த உணர்வுகள்
கருணாநிதியை அடக்கம் செய்த நாளிலிருந்து அவரது குடும்பத்தில் யாராவது ஒருத்தர் சமாதிக்கு வந்து விடுகிறாகள். அது புதுப்பதவியை ஏற்றுக் கொண்டு வாங்க ஆசீர்வாதம் ஆகட்டும், அமைதி பேரணியை நடத்துவதற்கான ஆசீர்வாதம் ஆகட்டும் எல்லாமே இங்கேதான்! குடும்ப உறுப்பினர்களின் மகிழ்ச்சியோ, துக்கமோ, கண்ணீரோ, எதுவானாலும் அந்த உணர்வினை சமாதியில் கொட்டிவிட்டு போய் கொண்டுதான் இருக்கிறார்கள்!
நேராக வந்த விஜய்
வெளிநாட்டிலிருந்து வீட்டுக்கு கூட போகாமல் நேராக சமாதி வந்தார் விஜய். இப்படித்தான் நடிகை ராதிகாதாவும். கருணாநிதியை அடக்கம் செய்த மறுநாளிலிருந்தே திரிஷா உட்பட பலர் சென்று மண்டியிட்டு மரியாதை செலுத்தினர். பேனா, கருப்பு கண்ணாடி வைத்து சமாதியையே வடிவமைத்தே விட்டார் மயில்சாமி.
குலுங்கி அழுத விஜயகாந்த்
ஆயிரம் அரசியல் பார்வை இருந்தாலும் அழகிரி நடத்திய காட்டிய மவுன ஊர்வலமானது தந்தைக்கு மகனின் பாச வெளிப்பாடே! தான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவன் என்று அடிக்கடி சொல்லும் வைகோ தன் தொண்டர்களுடன் மவுனமாக ஊர்வலத்தினை சமாதி வரை சென்று மலர்வளையம் வைத்துவிட்டு அஞ்சலி செலுத்தினார். ஆஸ்பத்திரிக்கும் வரமுடியவில்லை... அஞ்சலி செலுத்தவும் வரமுடியவில்லை என்ற ஆதங்கத்திலும் கவலையிலும், சென்னை ஏர்போர்ட்டிலிருந்து நேராக சமாதிக்கு சென்று குலுங்கி குலுங்கி அழுதார் விஜயகாந்த்.
இசைக்கலைஞர்கள்
இன்று 30-வது நாள் என்பதால் கவிதாஞ்சலி நடைபெறுகிறது. அதேபோல இசைக்கலைஞர்கள் குறிப்பாக நாதஸ்வர கலைஞர்கள் இன்று ஒன்று திரண்டு கருணாநிதி சமாதி முன்பு நாதஸ்வரம் வாசித்து அஞ்சலி செலுத்தினர். இப்படி 30 நாளோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றா இந்நிகழ்வுகள் எல்லாம்? நாளுக்கு நாள் சமாதியின் சிறப்பையும், அதன் வலிமையையும் தொண்டர்களோ, பொதுமக்களோ என்றென்றும் கூட்டிக் கொண்டேதான் செல்கிறார்கள்.