21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தமிழக சிஆர்பிஎப் வீரர்களின் உடல் தகனம்
சத்தீஸ்கரில் நக்சல்களின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணமடைந்த திருமுருகன், அழகுபாண்டி, பத்மநாபன் ஆகியோரது உடல்கள் அவரது சொந்த ஊரில் தகனம் செய்யப்பட்டது.
மதுரை: சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகளின் துப்பாக்கிச் சூட்டில் வீரமரணம் அடைந்த தமிழகத்தைச் சேர்ந்த மத்திய ரிசர்வ் படை வீரர்களின் உடல்கள் அவர்களது சொந்த ஊருக்கு கொண்டுசெல்லப்பட்டது. அங்கு 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் உள்ள தெற்கு பஸ்தார் பகுதியில் பர்கபால் - சிந்தாகுவா பகுதியில் நேற்று மதியம் சிஆர்பிஎப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் மறைந்திருந்த நக்ஸலைட்கள், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் தமிழக வீரர்கள் 4 பேர் உட்பட 26 பேர் பலியாகியுள்ளனர்.
வீரமரணடைந்த சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை நல்லூரைச் சேர்ந்த பத்மநாபன், திருவாரூர் நீடாமங்கலத்தைச் சேர்ந்த செந்தில்குமார் ஆகியோரது உடல்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தன. அவர்களது உடல்களுக்கு திருச்சி ஆட்சியர் பழனிசாமி, திருவாரூர் ஆட்சியர் நிர்மல்ராஜ் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அங்கிருந்து அவர்களது சொந்த ஊருக்கு உடல்கள் எடுத்துச் செல்லப்பட்டன.
தற்போது சேலம் கெங்கவல்லியைச் சேர்ந்த திருமுருகன், தஞ்சை நல்லூரைச் சேர்ந்த பத்மநாபன் ஆகியோரது உடல்கள் 21 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
அதேபோல் மற்றொரு வீரரான அழகுபாண்டியின் உடலும் மதுரை விமான நிலையத்துக்கு கொண்டு வரப்பட்டு அவரது சொந்த ஊரான ஊரான திருமங்கலம் அருகே உள்ள முத்துநாகையாபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. வீரர் அழகுபாண்டி உடலுக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அஞ்சலி செலுத்தினர். மேலும் வீரரின் குடும்பத்தினரிடம் ரூ.20 லட்சத்திற்கான காசோலையையும் வழங்கினர். பின்னர் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.