பெரியார் சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் இடைநீக்கம்
பெரியார் சிலை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் செந்தில்குமாரை அந்த அமைப்பு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
Recommended Video
ஆலங்குடி: பெரியார் சிலையை உடைத்ததாக கைது செய்யப்பட்ட சிஆர்பிஎப் வீரர் செந்தில் குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் பெரியார் சிலை உடைக்கப்பட்டது. இந்த விவகாரம் தமிழகத்தில் பெரிய அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பல்வேறு அரசியல்கட்சித் தலைவர்களும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த விவகாரத்தில் விசாரணை நடத்திவந்த போலீஸார், செந்தில்குமார் என்பவரைக் கைது செய்துள்ளனர்.
சிலை உடைப்பு
இவர் சி.ஆர்.பி.எப் படை வீரர் என்பதும், சத்தீஸ்கர் மாநிலத்தில் பணியில் இருப்பதும் தெரியவந்துள்ளது. விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்த அவர் குடிபோதையில் சிலை உடைப்பு சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
சமூகவலைதளங்கள்
செந்தில் குமார் குடித்துவிட்டு சிலை உடைப்பில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட விவகாரம் சிஆர்பிஎப் அமைப்புக்கு சமூக வலைதளங்கள் மூலமாகவும் செய்தி நிறுவனங்கள் மூலமாகவும் தெரியவந்தது.
30 நாட்களுக்கு விடுப்பு
இதைத் தொடர்ந்து சிஆர்பிஎப் செய்திக் குறிப்பை வெளியிட்டுள்ளது. அதில் செந்தில்குமாருக்கு கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி முதல் மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் அவருக்கு கடந்த 14-ஆம் தேதி முதல் 30 நாட்களுக்கு சொந்த ஊர் செல்ல விடுப்பு வழங்கப்பட்டது.
இடைநீக்கம்
இந்நிலையில் அவர் பெரியார் சிலை உடைப்பு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதை அறிந்தோம். மேலும் அவர் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தை தமிழக போலீஸ் விசாரணை நடத்தி வருவதால் அவரை பணியில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிடுகிறோம் என்று அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.