மீனிலும் கச்சா எண்ணெய் கலந்திருக்கலாம்.. சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கை
கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
சென்னை: எண்ணூர் துறைமுகத்தில் இரண்டு கப்பல்கள் மோதிக்கொண்டதில் எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்கலாம் என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் கருதுகின்றனர். இதனால் தற்போது மீன் சாப்பிடுவதை தவிர்க்கவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் அருகே கடந்த சனிக்கிழமை இரண்டு சரக்குப் கப்பல்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் சேதமடைந்த கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டு கடலில் கலந்தது. இதனால் எர்ணாவூர் பாரதியார் நகர், ராமகிருஷ்ணா நகர், எண்ணூர் திருவொற்றியூர் உள்ளிட்ட கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக மாறியது.
இதன் காரணமாக கடலில் பரவிய எண்ணெய், மெரினா கடற்கரை, திருவான்மியூர், பெசண்ட் நகர் கடல் பகுதி வரையிலும் பரவியுள்ளது. திருவான்மியூர் வரையில் கடல் பகுதிகள் எண்ணெய் படலமாக காட்சி அளிப்பதால் அதனை அகற்றுவதில் கடும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடல் வாழ் உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடலில் எண்ணெய் கலந்திருப்பதால் மீன்களும் விஷத்தன்மையானதாக மாறி இருக்குமோ? என்கிற அச்சமும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மீன்கள் சாப்பிடுவதை சில தினங்களுக்கு தவிர்ப்பது நல்லது என்று சுற்று சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.