மெசேஞ்சரை தாக்கும் தென்கொரிய வைரஸ்.. எச்சரிக்கை விடுக்கும் பேஸ்புக் நிறுவனம்
டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸ் தற்போது பேஸ்புக் மெசேஞ்சரை தாக்கி வருகிறது.
சென்னை: டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸ் தற்போது பேஸ்புக் மெசேஞ்சரை தாக்கி வருகிறது. உலகில் இருக்கும் பல நாடுகளில் பேஸ்புக் மெசேஞ்சர் இந்த வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறது,
இந்த வைரஸ் இந்தியாவையும் பாதிக்க வாய்ப்பு இருப்பதாக பேஸ்புக் எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. மேலும் இதுகுறித்து குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
நம்முடைய புகைப்படங்களை வெளியிடுவது தொடங்கி மொத்த கணினி செயல்பாட்டையே இந்த வைரஸ் முடக்கும் அளவிற்கு சக்தி கொண்டது என்று பேஸ்புக் தெரிவித்து இருக்கிறது.
டிஜிமைன் கிரிப்டோகரன்சி வைரஸ்
தென்கொரியாவில் இருக்கும் டிஜிமைன் என்ற நிறுவனம் இந்த டிஜிமைன் கிரிப்டோகரன்சி என்ற வைரஸை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டதாக கூறப்படுகிறது. இந்த வைரஸ் பேஸ்புக் மெசேஞ்சர் மூலமாக பரவ கூடியது. நம்முடைய பேஸ்புக்கில் இருந்து இன்னொருவருக்கு நமக்கே தெரியாமல் இந்த வைரஸ் பரவும். மெசெஞ்சரில் வீடியோ போல இது வரும். நாம் திறந்து பார்த்தால் நம் நண்பர்கள் அனைவருக்கும் பரவி விடும்.
நாடுகள்
இந்த வைரஸ் இன்னும் சில நாட்களில் இந்தியாவை தக்க வாய்ப்பு இருக்கிறது. இதுவரை வியட்நாம், உக்ரைன், பிலிப்பைன்ஸ், தாய்லாந்த், வெனிசுலா ஆகிய சிறிய நாடுகளை தாக்கி இருக்கிறது. அதற்கு அருகாமையில் இருக்கும் நாடுகளையும் விரைவில் தாக்க வாய்ப்பு உள்ளது.
பாதிப்பு யாருக்கு
இந்த வைரஸ் நம்முடைய மொபைல் மெசேஞ்சர் அப்ளிகேஷனின் மூலம் பரவாது. மாறாக கணினியில் மெசேஞ்சர் பயன்படுத்தும் போது பரவும். முக்கியமாக கூகுள் குரோமில் மெசேஞ்சர் பயன்படுத்தினால் இந்த வைரஸ் பரவும். இந்த வைரஸ் பரவிய அடுத்த நொடி அதுவாக அப்டேட் ஆகி நமது பேஸ்புக் கணக்கை செயல் இழக்க வைக்கும் என்றும் அதிர்ச்சியான தகவல் வெளியாகி உள்ளது.
என்ன பிரச்சனை
இந்த வைரஸ் வந்த பின் முதலில் கூகுள் குரோமில் சில அப்டேட்களை தானாக இது செய்யும். இதனால் நம் மெயில் ஐடியில் இருக்கும் தகவல்கள் வெளியாகும். அதன்பின் சில கோப்புகளை தரவிறக்கம் செய்து நம்முடைய கணினியின் செயல்பாட்டை குறைக்கும். சில நாளில் கணினியை முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரும் அளவிற்கு இந்த வைரஸ் செயல்படும் என்று கூறப்பட்டு இருக்கிறது.