கடலூரில் சூறாவளிக்கு சாய்ந்த 64 டிரான்ஸ்பார்மர்கள்- மின் வினியோகம் மொத்தமாக துண்டிப்பு!
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் சூறாவளி காற்று மற்றும் காட்டாற்று வெள்ளத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் 64 மின்மாற்றிகள் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன.
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 9 ஆம் தேதி புதுச்சேரி அருகே கரையை கடந்தபோது சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலை மற்றும் தெருக்களில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல தேங்கியது.
மேலும் ஏரிகளில் திறக்கப்பட்ட உபரிநீர் பெருக்கெடுத்து அருகில் உள்ள குடியிருப்பு மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்தது. காற்றின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாமல் மின்கம்பங்களும் மின்மாற்றிகளும் கீழே சாய்ந்து சேதம் அடைந்தன. மரக்கிளைகள் ஒடிந்து விழுந்ததால் மின்கம்பிகளும் அறுந்து விழுந்தன. இதனால் மின்சாரம் தடை ஏற்பட்டு கிராமங்கள் இருளில் மூழ்கின.
மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. குடிநீர் வினியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய பணிகளின் சேவையிலும் பாதிப்பு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு மின்சார ஜெனரேட்டர்களை கொண்டு குடிநீர் மற்றும் மின்சார வினியோகம் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
அதேபோல உயர் அழுத்த மின்பாதைகளில் நின்ற ஆயிரம் மின்கம்பங்கள் மற்றும் 198 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின் கம்பிகள், தாழ்வழுத்த மின் பாதையில் நின்ற 1,400 மின்கம்பங்கள் மற்றும் 340 கிலோ மீட்டர் தூரத்துக்கு மின்கம்பிகள் சேதம் அடைந்தன. இதன் மதிப்பு சுமார் ரூபாய் 4 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
பழுதடைந்த மின்மாற்றிகள், மின்கம்பங்கள் மற்றும் மின்கம்பிகளை அப்புறப்படுத்தி புதிய மின்மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பிகள் அமைப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரம் மின்சார ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
இதை பார்வையிடுவதற்காக தமிழ்நாடு மின்சார வாரிய தலைவர் சாய்குமார் நேற்று கடலூர் வந்தார். அவர் சிதம்பரம் பகுதியில் சேதம் அடைந்த மின் மாற்றிகள் மற்றும் மின்கம்பங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் சேதம் அடைந்த மின்மாற்றிகள், மின்கம்பங்களை அப்புறப்படுத்திவிட்டு மின்சார வினியோகம் செய்ய உடனடி நடவடிக்கை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.