டன் கணக்கில் குவிந்த மத்தி மீன்கள்.. மகிழ்ச்சியில் அள்ளி குதித்த கடலூர் மீனவர்கள்
100 டன் மத்தி மீன்கள் நேற்று மீனவர்கள் பிடித்து வந்தனர்.
கடலூர்: நீண்ட இடைவெளிக்கு பின்னர் டன் கணக்கில் மத்தி மீன்களை அள்ளி வந்திருக்கிறார்கள் கடலூர் மீனவர்கள்.
மலிவு விலையில் கிடைக்கும் மத்தி மீன்களில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இதயநோய்களை தடுப்பதுடன், ஆஸ்துமா, தோல்நோய், நரம்பு பாதிப்பு, முடி உதிர்தல் என அனைத்துக்கும் நல்ல ஒரு தீர்வாகவே பார்க்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் புற்றுநோய் வருவதைகூட இது தடுக்கிறது. அதனால்தான் இவ்வளவு மருத்துவ குணம் நிறைந்த மத்தி மீன்களை அதிகம் உணவில் சேர்த்து கொள்ளுமாறு மீன்வள பல்கலைக்கழகமே வேண்டுகோள் விடுத்திருந்தது.
மீனவர்களுக்கு உதவும் மீன்
மத்தி மீன்கள் என்றாலே தமிழகத்தில் முதலில் நினைவுக்கு வருவது கடலூர்தான். தினமும் கடலூர் மீன் பிடி துறைமுகத்தில் சராசரியாக 50 டன் மீன் பிடிக்கப்படுகிறது. இந்த மாவட்டத்தில் மத்தி மீன்களே மீனவர்களின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக உள்ளது. பெரிய பெரிய மீன்கள் கிடைக்காத சமயங்களில் எல்லாம் எப்போதுமே இங்குள்ள மீனவர்களுக்கு உதவுவது இந்த மத்தி மீன்களே.
டன் கணக்கில் மத்தி
சமீபத்தில் மீன்பிடி தடைகாலம் முடிந்த பின்னரும் சொல்லிக் கொள்ளும்படியாக மீன்கள் கிடைக்கவில்லை. இதனால் மீனவர்களுக்கு பெரிய அளவில் லாபமும் கிட்டாமல் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடலுக்கு சென்ற மீனவர்கள் டன் கணக்கில் மத்தி மீன்களை பிடித்து கொண்டு நேற்று மாலை துறைமுகம் திரும்பினர். அப்போது மீனவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடனும், திருப்தியுடனும் காணப்பட்டனர்.
மின்னிய மீன்கள்
கடலுக்கு சென்ற மீனவர்கள் நேற்று திரும்பும்போது, டன் கணக்கில் மத்தி மீன்கள் பிடித்து வந்தனர். சுமார் 100 டன் அளவில் தாங்கள் பிடித்து வந்த மத்தி மீன்களை கரையில் கொட்டினர். குவியல் குவியலாக மின்னிய மீன்களை பார்ப்பதற்கென்றே துறைமுகத்தில் கூட்டம் கூடியது. ஏராளமான வியாபாரிகளும் போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.
கை கொடுக்கும் மத்தி
அதேபோல, வெளிமாநிலங்களுக்கும் பெட்டி பெட்டியாக மத்தி மீன் கொண்டு செல்லப்பட்டது. ஒரு பெட்டியில் 50 அல்லது 60 கிலோ மீன்கள் இருக்கும். இவ்வாறு ஒரு பெட்டி நேற்று 1500-க்கு விற்கப்பட்டது. மீன்பிரியவர்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்லாமல், 49 மீனவ கிராமத்தினருக்கும் இதுவரை கை கொடுத்து உதவி கொண்டிருப்பது இந்த மத்தி மீன்கள்தான்